வீரர்கள் வேதனை
உலகில் மிகவும் பணம் பலம் வாய்ந்த கிரிக்கெட் வாரியங்களில் பிசிசிஐ முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ஊதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும் ஊதியங்கள் வாரி வழங்கப்படுகின்றன. ஆனால் முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு அப்படி இல்லை. கொரோனா காரணமாக பல்வேறு வீரர்கள், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
சம்பள உயர்வு
இந்நிலையில் அவர்களுக்கு நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது அவர்களின் ஊதியத்தை வரும் ராஞ்சி கோப்பை தொடர் முதல் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் 20 போட்டிகளுக்கு மேல் விளையாடி அனுபவம் பெற்றவர்களுக்கு, இனி நாளொன்றுக்கு ரூ.60,000 ஊதியமாக வழங்கப்படவுள்ளது. குறைந்த அனுபவம் உள்ள வீரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.45,000 வழங்கப்படவுள்ளது. தற்போது இருக்கும் ஒப்பந்தப்படி வீரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.35,000 வழங்கப்பட்டு வருகிறது. வெளியில் உட்காரவைக்கப்படும் வீரர்களுக்கு அதில் பாதி தொகை தான் வழங்கப்படுகிறது.
மற்ற தொடர்கள்
இதனிடையே கொரோனா காரணமாக உள்நாட்டு போட்டிகள் தடைப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு முதல் வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. பிசிசிஐ-ன் இந்த ஊதிய அதிகரிப்பு வீரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் ராஞ்சி போட்டி தவிர்த்து விஜய் ஹசாரே தொடருக்கு ரூ.35,000 மற்றும் முஷ்டக் அலி கோப்பைக்கு ரூ.17,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கு சிக்கல்
ஊதியம் உயர்த்தப்பட்டாலும், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது தற்போதைக்கு சிக்கலாக உள்ளது. இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகளை அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. அதே போல டி20 உலகக்கோப்பையும் இந்தியாவை விட்டு வெளியே சென்றுள்ளது. எனவே இனி எப்போது உள்நாட்டு போட்டிகள் நடக்கும், எப்போது வீரர்கள் ஊதியம் பெறுவார்கள் என்பதில் சந்தேகம் நிலவுகிறது.