உலகக்கோப்பை
கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடர், வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்தியா தற்போது இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. உலகக்கோப்பைக்கு முன்னர் இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடராக இது பார்க்கப்படுகிறது.
புதிய பிளான்
இங்கிலாந்து தொடருக்கு பிறகு ஏப்ரல் முதல் ஐபில் தொடர் மற்றும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என இந்தியா பிசியாக உள்ளது. ஆனால் இதற்கு இடையில் உலகக்கோப்பைகாக இந்திய அணியை தயார் படுத்த 2 புதிய டி20 தொடரை பிசிசிஐ பிளான் செய்துள்ளது. ஆம், இதற்காக டி20 போட்டிகளில் சிறந்த அணிகளான நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
எங்கு நடக்கிறது?
பிசிசிஐ போன்றே உலகக்கோப்பை முன்னர் ஓரிரு தொடரில் ஆடி பயிற்சி பெற வேண்டும் என நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்களும் எண்ணியுள்ளது. எனவே அந்த இரு அணிகளும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இரு அணிகள் எப்போது இந்தியா வருகின்றன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு வந்த தென்னாப்பிரிக்க அணி ஒரு நாள் போட்டியில் ஆடவிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக அந்த தொடர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இடம் மாற்றமா?
இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறும் என அனைத்து அணிகளும் இந்திய மைதானங்களை புரிந்துக்கொண்டு வரும் நிலையில் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் அணி மற்றும் ஊழியர்களுக்கு பிசிசிஐ இன்னும் விசாவை உறுதி செய்யாததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் இதற்கு இடையே ஆசிய கோப்பை தொடரும் நடத்த திட்டங்கள் போடப்பட்டு வருகிறது.