கோலியின் முடிவு
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பதால், அடுத்த கேப்டனாக நிச்சயம் ரோகித் சர்மா தான் நியமிக்கப்படுவார் என உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை மும்பை அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ளார். இதே போல கோலி இல்லாதபோதும் சர்வதேச டி20 போட்டிகளில்ய்ம் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்தும் விதம் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தது. எனவே அவர் தான் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.
துணைக்கேப்டன்
ரோகித் சர்மா கேப்டனாகி விட்டால், அடுத்த துணைக்கேப்டன் யார் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. இதற்காக இந்தியாவின் 3 நட்சத்திர வீரர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீரர்களின் பெயரும் தெரியவந்துள்ளது. அதாவது கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா அகியோருக்கு இடையே தான் அந்த மும்முணை போட்டி.
ராகுல்
கே.எல்.ராகுல் ஓரளவிற்கு நல்ல அனுபவம் வாய்ந்த வீரராகும். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்திய கேப்டன்சி அனுபவம் அவருக்கு உள்ளது. அவரின் கேப்டன்சியில் ப்ளே ஆஃப் சுற்றுகள் வரை அந்த அணி தகுதிப்பெற்றுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் பந்துவீச்சு, மற்றும் ஃபீல்ட் செட்டிங்கிலும் அவர் திறம்பட செயல்படுவார் எனத்தெரிகிறது.
ரிஷப் பண்ட்
இதே போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட்-ம் துணைக்கேப்டன் போட்டியில் உள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இளம் வீரராக இருந்தாலும் அவரின் கேப்டன்சியில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த முறை கோப்பை வென்றுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இயற்கையாகவே இவருக்கு கேப்டன்சி திறமை இருப்பதால் முன்னாள் வீரர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
ஜஸ்பிரித் பும்ரா
இவர்கள் இருவருக்கும் மத்தியில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போட்டி போட்டு வருகிறார். சர்வதேச போட்டிகளில் தற்போது நல்ல அனுபவத்தை பெற்றுள்ள பும்ரா டி20 துணைக்கேப்டனாக இருப்பதற்கு தகுதியுள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இவர்கள் 3 வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு தான் துணைக்கேப்டன் பதவியை பிசிசிஐ கொடுக்கும் எனத்தெரிகிறது.