சென்னை : கடந்த மாதம் தோஹாவின் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார்.
ஆனால், அவர் குறித்து ஒரு வதந்தி பரவி வருகிறது. தோஹா தடகளப் போட்டியின் போது எடுக்கப்பட்ட மாதிரிகளை ஊக்கமருந்து சோதனைகளுக்கு உட்படுத்திய போது, கோமதி மாரிமுத்து அதில் தோல்வி அடைந்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை என இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே சுமாரிவல்லா தெரிவித்துள்ளார். இந்த செய்தி குறித்து கோமதி மாரிமுத்துவும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை தான் செய்தித்தாளில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக கோமதி மாரிமுத்து கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து தடகள சம்மேளனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த தகவல் எங்கிருந்து பெறப்பட்டது, என்னிடம் ஏன் விளக்கம் கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கோமதி.
மற்றொரு புறம், பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது உண்மைதான் என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை உண்மையா? இல்லையா? என்பது இந்திய தடகள சம்மேளனம் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ தகவல் மூலம் தான் தெரிய வரும்.