கோலி பதவி விலகல்
இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகியதற்கு அதிக பணிச்சுமையை காரணம் காட்டியிருந்தார் விராட் கோலி. இதனையடுத்து சீனியர் வீரரான ரோகித் சர்மா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது.
மர்மம்
ஆனால் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு பின்னால் மிகப்பெரும் பிரச்னை இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது விராட் கோலி குறித்து அணியின் சீனியர் வீரர் ஒருவர் பிசிசிஐ-யிடம் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டியிருந்தார். அதாவது விராட் கோலி அணியில் யாரின் பேச்சையும் கேட்காமல், தவறான முடிவுகளை எடுப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்.
பயிற்சியாளர்களை மதிக்கவில்லை
அவரின் அழுத்தங்கள் அணி வீரர்களின் தேர்விலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியாளர்களுக்கும் கோலி உகந்த மரியாதை கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. வலைப்பயிற்சியின் போது அவரின் பேட்டிங்கில் ஏதாவது மாற்றங்களை பயிற்சியாளர்கள் கூறினால், அவர் 'என்னை குழப்பாமல் சென்றுவிடுங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதனால் அணி வீரர்கள் பலருக்கும் கோலியின் மீது கடும் அதிருப்தி உள்ளது. ஆனால் அவர்களால் வெளிப்படையாக கூற முடியவில்லை என அவர் பிசிசிஐ அதிகாரிகளிடம் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்ததாக தெரிகிறது.
அந்த சீனியர் வீரர்
இந்நிலையில் விராட் கோலி மீது குற்றச்சாட்டை வைத்த அந்த சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் என்பது தெரியவந்துள்ளது. அவர் தான் கோலியின் செயல்பாடு தான் மீண்டும் அணியில் இடம்பெறமாட்டோமா என்ற அச்சத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு நிறைய போட்டிகளில் சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை எனத்தெரிகிறது.
இங்கிலாந்து டெஸ்ட்
சர்வதேச ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் கடந்த 2 வருடங்களாகவே ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கோலி வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் கூட, அஸ்வினை சேர்ப்பதற்கான தேவை இருந்தும், வேண்டுமென்றே ஜடேஜாவுக்கு வாய்ப்பளித்து வந்தார் விராட் கோலி. இதனால் விராட் கோலிக்கும் - அஸ்வினுக்கும் இருந்த மோதல் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.