எதிர்பார்ப்புகள்
2021ம் ஆண்டுகான ஐபிஎல் போட்டிகளே இன்னும் முழுவதுமாக நடைபெற்று முடியாத சூழலில் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. இதற்கு காரணம் அடுத்தாண்டு ஐபிஎல்-ல் 2 அணிகள் புதிதாக இணைக்கப்படவுள்ளது. அதற்காக இந்தாண்டு இறுதியில் மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. மேலும் ஐபிஎல்-ன் ஆட்ட முறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒப்பந்த காலம் முடிவடைகிறது
இந்நிலையில் ஐபிஎல் கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் மாறவுள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 16,347.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தமானது 2022ம் ஆண்டுடன் முடிவடையவுள்ளது.
ரிலையன்ஸ்
புதிய ஒளிபரபரப்பு உரிமத்திற்கான ஏலத்தை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே விளையாட்டு சேனல்களை தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், முதல் படியாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரபரப்பு செய்ய மெகா திட்டம் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு துறைகளிலும் கால்பதித்துள்ள நிலையில் தற்போது தொலைக்காட்சி துறையிலும் ஐபிஎல் எனும் அசுர பலத்துடன் களமிறங்க ஏற்பாடு செய்து வருகிறது.
டிஜிட்டல் உரிமம்
ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே 2020ம் ஆண்டுக்கான டிஜிட்டல் ஒளிபரபரப்பு உரிமத்திற்கான ஏலத்தில் கலந்துக்கொண்டது. இதற்காக ரூ.3075 கோடி வரையிலும் கொடுக்க தயாராக இருந்தது. ஆனால் அதனை விட அதிக தொகை கொடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கே அந்த உரிமத்தையும் பெற்றது. இந்த சூழலில் அடுத்தாண்டு ஏலத்தில் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி என இரண்டிற்குமே ரிலையன்ஸ் போட்டியிடுகிறது.
பெரும் நிறுவனங்களின் போட்டி
ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மட்டுமன்றி ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ், அமேசான் இந்தியா ஆகிய பெரிய நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டுள்ளது. இதில் தற்போது மற்றொரு பெரும் நிறுவனமான ரிலையன்ஸும் இணைந்திருப்பதால் யாருக்கு அந்த உரிமம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல்-ல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலைமையில் செயல்பட்டு வரும் இந்த அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.