அடுத்தடுத்த போட்டிகள்
முதலில் வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி பிப்ரவரி 6ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடனேயே இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போட்டிகள் என்பதால் இந்திய அணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இலங்கை நிபந்தனை
இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விடுத்துள்ளது. அதாவது முதலில் 2 டெஸ்ட் போட்டிகள், பின்னர் 3 டி20 என திட்டமிட்டு மைதானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் முதலில் டி20 போட்டிகளை தான் நடத்த வேண்டும் என பிசிசிஐயிடம் இலங்கை வாரியம் கேட்டுள்ளது.
காரணம் என்ன
இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பிப்ரவரி 20ம் தேதி வரை இத்தொடர் உள்ளது. பிசிசிஐ முதலில் டி20 தொடரை நடத்தினால் ஆஸ்திரேலியாவின் பபுளில் இருந்து நேரடியாக வீரர்கள் இந்தியாவுக்கு வந்துவிடுவார்கள். இது பயோ பபுள் பாதுகாப்பு சிரமங்களை குறைக்கும். எனவே பிசிசிஐ திட்டங்களை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்குமா பிசிசிஐ
ஆனால் இதனை பிசிசிஐ ஏற்குமா என்பதில் தான் குழப்பம் உள்ளது. ஏனென்றால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்கூட்டியே அனைத்து பணிகளையும் முடித்து வருகிறது. இந்த சமயத்தில் டி20 போட்டிகளுக்கான மைதானங்களை தயார் செய்வது, அட்டவணை மாற்றுவது போன்றவற்றை பிசிசிஐ விரும்பாது என்றே தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.