4 முறை ஐபிஎல் வெற்றி
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, அந்த அணிக்காக கடந்த 2013, 2015, 2017 மற்றும் 2019 என நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை பரிசாக அளித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி கொண்டது.
சச்சின், ஹர்பஜனுக்கு பின்பு கேப்டன்
கடந்த 2012ல் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அப்போதைய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்ததை அடுத்து ஹர்பஜன் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் நீடிக்கவில்லை. இந்நிலையில் 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோகித் சர்மா.
ரிக்கி பாண்டிங் குறித்து ரோகித்
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வீட்டில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஈடுபட்டனர். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கோச்சாக கடந்த 2013ல் நியமிக்கப்பட்ட முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் குறித்த தனது நினைவலைகளை ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டார்.
பாண்டிங்கின் தனித்திறமை
ரிக்கி பாண்டிங் கண்டிப்பாக வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தவராகவே இருக்க வேண்டும் என்று தான் கருதுவதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். ஒரு வீரருக்குள் இருக்கும் திறமையை எவ்வாறு வெளியில் கொண்டுவருவது என்பதுகுறித்து பாண்டிங்கிற்கு நன்றாக தெரியும் என்று ரோகித் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ள பாண்டிங், தொடர்களை வெல்வது குறித்து நன்றாக அறிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்வேகம் அளிக்கக்கூடியவர்
கடந்த 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட ரிக்கி பாண்டிங் அந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் சரியாக ரன்களை குவிக்காததால், அந்த கேப்டன் பதவியை துறந்து தன்னிடம் வழங்கியதையும் ரோகித் நினைவு கூர்ந்தார். இளம் வீரர்களுக்கு எப்போதும் உத்வேகத்தை அளிக்கக்கூடியவராகவும், தனக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருப்பராகவும் பாண்டிங் இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.