முதல் ஒருநாள் சர்வதேச போட்டி
சென்னையில் நேற்று நடந்து முடிந்துள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்துள்ள போதிலும், ரிஷப் பந்த் அதிகபட்சமாக 71 ரன்களை குவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைகொடுத்த ரிஷப் பந்த்
நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த், அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்து அணியை நிலைநிறுத்தினார்.
ரிஷப் பந்த் முழக்கமிட்ட ரசிகர்கள்
பந்த் தனது முயற்சியில் ரன்களை குவித்தாலும், அணியின் வெற்றிக்கு அது உதவி செய்யவில்லை. ஆயினும் அவரது ஆட்டத்தின்போது ரிஷப் பந்த்தின் பெயரை முழக்கமிட்டு சென்னை ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினர்.
வரலாற்றை மாற்றிய சென்னை
தொடர்ந்து பல போட்டிகளில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரிஷப் பந்த் தவறிய நிலையில், தோனியின் பெயரை உச்சரித்து, அவரை பல்வேறு மாநிலங்களின் ரசிகர்கள் வெறுப்பேற்றி வந்தனர். இந்நிலையில், நேற்றைய பந்த்தின் அதிரடி ஆட்டத்தை சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
"தினந்தோறும் முன்னேற்றி கொள்கிறேன்"
இந்நிலையில் தன்னை உற்சாகப்படுத்திய சென்னை ரசிகர்களுக்கு ரிஷப் பந்த் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய திறமைகளை தினந்தோறும் முன்னேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே பிரதானம் - ரிஷப்
அணியின் வெற்றிக்கு தன்னால் முடிந்த முயற்சியை எடுப்பது மற்றும் நல்ல ரன்களை குவிப்பது இவை இரண்டையும் தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருவதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.