பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூருவில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் வாட்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி பேட்டிங்கை தொடங்கியது. டெல்லி அணிக்கு ஆதிய்யா தாரே (18), பில்லிங்ஸ் (25) சொதப்பல் துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த கருண்நாயர் (4) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் (13) நிலைக்கவில்லை. இப்படி ஒருவர் பின் ஒருவராக பெவுலியன் நோக்கி நடையை கட்டிய வண்ணம் இருந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறத்தில் அசாரமல் நம்பிக்கையுடன் ரிஷப் பந்த் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அடுத்து வந்த மோரிஸ் (4), பிராத்வெயிட் (1), கம்மின்ஸ் (6) என ஒருவரும் அவருக்கு கம்பெனி கொடுக்கவில்லை. இருந்தாலும்
ஒரு கட்டத்தில் டெல்லி அணியின் வெற்றிக்கு 18 பந்தில் 32 ரன்கள் தேவைப்பட்டது. அனல் வேகத்தில் மில்ஸ் வீசிய 18வது ஓவரில் 11 ரன்கள் எடுத்தது டெல்லி அணி. 19வது ஓவரை நேர்த்தியாக வீசிய வாட்சன் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 19 ரன்கள் தேவைபட்டது.
கடைசி ஓவரை பவன் நேகி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரிஷப் பந்த் போல்ட் முறையில் அவுட் ஆனார். இதன் பின்னர் டெல்லியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. இருப்பினும் இறுதி வரை களத்தில் போராடிய ரிஷப், 57 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து வந்த நதீம் 'டக்' அவுட்டானார். இதையடுத்து டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டும் எடுத்தது. இதையடுத்து பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சரியான பார்ட்னர் ஷிப் அமையாததால் ரிஷப் பந்தின் ஆட்டம் வீணானது.