தொடரை வென்ற இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இந்த தொடரில் ரிஷப் பந்த் தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தினார். இந்நிலையில் கடந்த 4வது போட்டியிலும் அவுட்டாகாமல் இறுதிவரை இருந்து 89 ரன்களை அவர் குவித்தார்.
முக்கிய காரணம்
இதையடுத்து அணியின் வெற்றிக்கு பந்த் முக்கிய காரணமாக அமைந்தார். போட்டியின் நாயகனாக அவர் தேர்வானார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
ஸ்மித் பாராட்டு
இந்நிலையில் இந்தியாவின் அபூர்வமான வீரர் ரிஷப் பந்த் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்காக பேசிய ஸ்மித், நேற்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தின்போது பிட்ச்சில் ரிஷப் பந்த்தின் ஷாட்கள் ஒவ்வொன்றும் வியப்பானவையாக இருந்தன என்று குறிப்பிட்டார்.
வழிநடத்திய பந்த்
4வது போட்டியை ரிஷப் பந்த் சிறப்பாக வழிநடத்தி சென்றதாகவும், ஷார்ட் பந்துகளை அடிப்பதில் ரிஷப் சிறப்பாக செயல்பட்டதை பார்த்ததாகவும் எந்த இடத்தில் அவர் அடித்து ஆடுகிறார் என்பது குறித்து அறிந்ததாகவும் ஸ்டீவ் ஸ்மித் மேலும் கூறினார். இந்த தொடரில் ஒன்றிரண்டு போட்டிகளை தவிர்த்து, ஒற்றை இலக்கங்களில் ஸ்மித்தை இந்திய பௌலர்கள் அவுட்டாக்கியது குறிப்பிடத்தக்கது.