பிராட் ஹட்டின்
ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹட்டின் 224 போட்டிகளில் ஆடி உள்ளார். அவர் ஆடம் கில்கிறிஸ்ட் ஓய்வு பெற்ற பின் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தார். கில்கிறிஸ்ட் அளவுக்கு அவர் புகழ் பெறவில்லை என்றாலும் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டார்.
ஆஸி. அணியில் நிலைத்தார்
அதன் காரணமாகவே சிறந்த வீரர்களை மட்டுமே அணியில் வைத்துக் கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் அவரால் 224 போட்டிகள் வரை ஆட முடிந்தது. தற்போது இளம் வீரர்களுக்கு விக்கெட் கீப்பிங் பயிற்சி அளித்து வரும் அவர், இந்திய அணியின் ரிஷப் பண்ட் குறித்தும் தன் கருத்துக்களை முன் வைத்தார்.
ரிஷப் பண்ட் வருகை
ரிஷப் பண்ட், தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்ற அடையாளத்துடன் தான் இந்திய அணிக்கு வந்தார். முதலில் டெஸ்ட் அணியில் ஆடிய அவர் அதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்து அசத்தினார்.
அதிரடி வீரர்
அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் தோனி போலவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பினிஷராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதனால், தோனி அணியில் இருக்கும் போதே சில டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு பெற்றார் ரிஷப் பண்ட்.
தோனிக்கு பின்..
தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ரிஷப் பண்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக மாறினார். அவர் தோனியைப் போல கீப்பிங் செய்ய முயன்றார். பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை அளிக்க முயன்றார். டிஆர்எஸ் ரிவ்யூக்கள் கேட்க முயன்றார்.
பண்ட் தடுமாற்றம்
ஆனால், அவை எதுவும் வெற்றி அடையவில்லை. ரிஷப் பண்ட் கீப்பிங், டிஆர்எஸ், பேட்டிங் என அனைத்திலும் மோசமாக சொதப்பினார். அவர் குறிப்பாக பேட்டிங்கில் தடுமாறியது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதனால், தற்போது ராகுல் அணியின் முதன்மை கீப்பராகவும், பண்ட் மாற்று கீப்பராகவும் உள்ளனர்.
என்ன சொன்னார் ஹட்டின்?
இந்த நிலையில் தான் ஓய்வு பெற்ற அனுபவ விக்கெட் கீப்பர் பிராட் ஹட்டின் தோனி பெயரை சொல்லாமல், அவர் அவரைப் போல செயல்படுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் என. பண்ட்டுக்கு அறிவுரை கூறி உள்ளார்.
அவராக இருக்க வேண்டும்
"ரிஷப் பண்ட் அவராக இருக்க வேண்டும். அப்படித் தான் அவர் தனக்கான முத்திரையை பதிக்க முடியும். அவர் அவராகவே இருக்க வேண்டும்" என அறிவுரை கூறினார் பிராட் ஹட்டின். மேலும், தன் அனுபவத்தையும் அவர் கூறினார்.
ஹட்டின் அனுபவம்
"நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் ஆட வாய்ப்பு கிடைத்த போது, ஆடம் கில்கிறிஸ்ட் போலவோ, இயான் ஹீலி போலவோ செயல்பட முயலவில்லை. என் தனித்துவமான ஆட்டத்தை கொண்டு வந்தேன். இங்கே சவால் என்னவென்றால், நீங்கள் வேறு ஒருவரைப் போல இருக்க முயற்சிக்கக் கூடாது நீங்கள் உங்களின் உண்மையான நபராக இருக்க வேண்டும்" என்றார்.
தோனி குறித்து..
இந்தியா, தோனி போன்ற ஒருவரை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை பெற்றது மிகப் பெரிய வரப்பிரசாதம். அவரது பெருமையை முன் கொண்டு செல்வது மிகவும் கடினம். ஆனால், அடுத்து வரும் விக்கெட் கீப்பர், தன் தனித்துவத்தை பேசும் அளவுக்கு செயல்பட வேண்டும் என்றார் ஹட்டின்.
நெத்தியடி
ரிஷப் பண்ட், தோனியைத் தான் பின்பற்ற முயல்கிறார் என்பதை இதைவிட வெளிப்படையாக சொல்ல முடியாது. பண்ட் தன் பாணியை மாற்றிக் கொண்டு, ஐபிஎல் தொடரில் இயல்பாக ஆடுவதைப் போல பதற்றமின்றி, இந்தியா அணிக்காக ஆடும் போதும் செயல்பட வேண்டும். அதுதான் அவரை வெற்றியடைய வைக்கும்.