தொடர் வெற்றி
இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் நடந்த 4வது போட்டியில் சிறப்பான வகையில் வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் சதமடித்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிம்ம சொப்பனம்
இந்த தொடரில் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பான தருணங்களை இந்திய அணிக்கு அளித்திருந்தார் ரிஷப் பந்த். இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கடந்த போட்டிகளில் அவரது விக்கெட் கீப்பிங்கில் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நெருக்கடி அளிப்பது சிரமம்
இந்நிலையில் ரிஷப் பந்த்தை செயல்படாமல் செய்வது மிகவும் கடுமையானது என்றும் அவர் மிகவும் வலிமையான வீரர் என்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஜோ ரூட், ரிஷப் சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவரது பேட்டிங்கில் அவருக்கு நெருக்கடி அளிப்பது சிரமமானது என்றும் கூறியுள்ளார்.
வெற்றியை தந்த ரன் குவிப்பு
ரிஷப் பந்த் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து ஏற்படுத்திய 113 ரன்கள் பார்ட்னர்ஷிப்பே நேற்றைய 4வது போட்டியில் இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியை ஏற்படுத்தி தந்தததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியபோது, ரிஷப் பந்த் மற்றும் சுந்தர் குவித்த ரன்களே அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.