வாரிசாக நிரூபிக்க ரிஷப் தீவிர முயற்சி
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனியின் வாரிசாக தன்னை நிரூபிப்பதற்காக ரிஷப் பந்த் கடுமையான சவால்களையும் அழுத்தங்களையும் சந்தித்து வருவதாக தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்
சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி விலகியுள்ள நிலையில், அந்த இடத்தில் வைத்து ரிஷப் பந்த் பார்க்கப்படுகிறார். ஆனால் சமீப காலங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த ரிஷப் பந்த் தவறிய நிலையில், தற்போது விரித்திமான் சாஹாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிஷப் அடுத்துவரும் சில தொடர்களில் விளையாடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
"அழுத்தங்களை சந்திக்கும் வீரர்கள்"
இந்நிலையில் ரிஷப் பந்த்தை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ரோஹித் ஷர்மா கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் அழுத்தங்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் தெரிவித்துள்ளார்.
அதை எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டும்
இந்நிலையில் ரோஹித் ஷர்மா மற்றும் சுனில் கவாஸ்கரின் கருத்துக்களை ஆமோதித்துள்ள எம்எஸ்கே பிரசாத், இந்த அழுத்தங்கள் கிரிக்கெட்டின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து, மற்றவர்களை போல ரிஷப் பந்த் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
விராத், ரோஹித் உதாரணம்
கிரிக்கெட்டில் உள்ள அழுத்தங்களை எதிர்கொண்டு, வெளிவந்தால் மட்டுமே அவர் உண்மையான சாம்பியனாக திகழ முடியும் என்று தெரிவித்துள்ள எம்எஸ்கே பிரசாத், ரிஷப் பந்தின் கண்முன்பு இதற்கான உதாரணங்களாக விராத் கோலி மற்றம் ரோஹித் சர்மா உள்ளதாக கூறியுள்ளார்.
அவரது சொந்த திறமைகள் உண்டு
இந்திய கிரிக்கெட்டில் கடந்த 15 ஆண்டுகளாக விளையாடிவரும் தோனி போன்ற சாம்பியனுடன் தன்னை ஒப்புநோக்கி, அவரைப் போல ஆவதற்கு ரிஷப் பந்த் முயலக்கூடாது என்று தெரிவித்த எம்எஸ்கே பிரசாத், தன்னுடைய சொந்த திறமைகளை கொண்டே அணியில் சாதிக்க ரிஷப் முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.