ரிஷப் பண்ட் பில்டப்
ரிஷப் பண்ட்டை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என உலகக்கோப்பை தொடரின் போது ரசிகர்கள் பெரும் குரல் எழுப்பினர். அவரும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், உலகக்கோப்பை தொடரில் முக்கியமான அரையிறுதிப் போட்டியில் சொதப்பினார்.
தொடர்ந்து சொதப்பல்
சரி, இளம் வீரர் என்பதால் முதல் உலகக்கோப்பை தொடரில் சொதப்பினார் என விட்டுவிட்டனர். ஆனால், தொடர்ந்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரே மாதிரி தவறான ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வந்தார் பண்ட்.
அணியின் சூழ்நிலை
எப்போது அடித்து ஆட வேண்டும், எப்போது நிதானம் காட்ட வேண்டும் என்ற புரிதல் அவருக்கு இல்லை. அதனால், தான் அதிரடியாக ஆடுகிறேன் என கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வருகிறார் என்ற விமர்சனம் எழுந்தது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்
தென்னாப்பிரிக்கா டி20 தொடர் துவங்கும் முன் பேட்டி அளித்த ரவி சாஸ்திரி மற்றும் கோலி, ரிஷப் பண்ட்டை வெளுத்துக் கட்டி இருந்தனர். அதிலும் ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட்டுக்கு சில போட்டிகள் தான் வாய்ப்பு கிடைக்கும் என கூறி இருந்தார்.
இன்னும் மாறவில்லை
அப்படி இக்கட்டான சூழ்நிலையில், தென்னாப்பிரிக்க தொடரில் இரண்டாவது டி20யில் களமிறங்கிய ரிஷப் பண்ட், மீண்டும் அதே தவறை செய்தார். வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில், பீல்டர் கைக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அணியின் திட்டம் என்ன?
2020 டி20 உலகக்கோப்பை தொடர் வர இருப்பதால், இந்திய அணி அதற்குள் இந்திய அணியை இறுதி செய்து அவர்களுக்கு அதிக போட்டிகளில் ஆட வைத்து அனுபவம் அளிக்க வேண்டும். அதனால், ஒவ்வொரு வீரருக்கும் சில போட்டிகள் தாம் வாய்ப்பு அளிக்கப்படும் அதற்குள் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என கேப்டன் கோலி கூறி இருந்தார்.
மாற்று வீரர்கள்
ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இந்திய அணி அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மாற்று வீரர்களை இப்போதே அடையாளம் கண்டு வைத்துள்ளது இந்திய தேர்வுக் குழு.
அந்த மூவர்
இந்தியா ஏ அணியில் கலக்கலாக ஆடி வரும் கேஎஸ் பாரத் டெஸ்ட் போட்டிகளுக்கும், உள்ளூர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தங்களை தொடர்ந்து நிரூபித்து வரும் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கும் மாற்று வீரர்களாக தேர்வு செய்து வைத்துள்ளது தேர்வுக் குழு.
மூன்று அணிகளிலும் சிக்கல்
ரிஷப் பண்ட்டுக்கு டி20 அணியில் மட்டும் இல்லை, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியிலும் சிக்கல் எழுந்துள்ளது என்பதே உண்மை. ஏற்கனவே, டெஸ்ட் அணியில் விரிதிமான் சாஹா தன் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.
மீண்டும் தவறு செய்தால்..
அடுத்து நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரிஷப் பண்ட் மீண்டும் ஒரு முறை தவறான அதிரடி ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தால், அதுவே அவரது கடைசி சர்வதேச டி20 போட்டியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.