ரிஷப் பண்ட் தவறு
இளம் வீரர் ரிஷப் பண்ட் தோனிக்கு பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற அடையாளத்துடன் வந்தார். அவர் பேட்டிங்கில் ஒரு தவறை துவக்கம் முதல் செய்து வருகிறார். அது தவறான ஷாட் தேர்வு.
வெஸ்ட் இண்டீஸ்-இல் சொதப்பல்
போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் கண்டமேனிக்கு ஷாட் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழப்பார். அதே போல, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சொதப்பிய பண்ட், அந்த தொடரில், டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் என மூன்றிலும் சேர்த்து 199 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
அடுத்த ஆள் ரெடி
அதனால், ரிஷப் பண்ட் மீது விமர்சனம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்தியா ஏ போட்டியில் அசத்தல் பேட்டிங் செய்து இந்திய அணியில் சேர காத்திருப்பில் இருக்கிறார்.
ரவி சாஸ்திரி விளாசல்
இந்த நிலையில் தான் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரிஷப் பண்ட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விளாசி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பண்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து இருந்தார்.
முதல் பந்து டக் - அவுட்
அதைக் குறிப்பிட்ட ரவி சாஸ்திரி, அது மிகவும் ஏமாற்றமாக இருந்தது என்றார். அந்த முதல் பந்து டக் - அவுட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பண்ட்டின் இரண்டாவது முதல் பந்து டக் அவுட் ஆகும். முதல் டி20 போட்டியிலும் அதே போல டக் அவுட் ஆகி இருந்தார்.
அணிக்கு ஆபத்து
அவர் இரண்டு முறை அதே போல முயற்சி செய்து ஆட்டமிழந்தார். நாங்கள் அவரிடம் இதைப் பற்றி கூறுவோம். நிச்சயம் அவர் முட்டியில் தட்டுவோம் (திட்டு விழும் என்பதை இப்படி கூறி இருக்கிறார்). திறமை இருக்கிறதோ, இல்லையோ, உங்களையே சரிய விடுவதை விட்டு விடுங்கள், நீங்கள் அணியை கீழே சரிய விடுகிறீர்கள் என்றார் ரவி சாஸ்திரி.
என்ன தேவை?
எதிரில் கேப்டன் நிற்கிறார். எட்ட வேண்டிய இலக்கு உள்ளது. அந்த நேரத்தில் என்ன தேவை என்பது தான் பொறுப்பாக கிரிக்கெட் ஆட வேண்டிய தருணம் என்று குறிப்பிட்டார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
கோலி என்ன சொன்னார்?
ரிஷப் பண்ட் பற்றி அதே பேட்டியில் கேப்டன் கோலி கூறுகையில், அவர் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்கள் எதிர்பார்ப்பு. ஒருவர் தான் என்ன நினைக்கிறார் என்பதை மட்டுமே வைத்து ஆடுவார் என நாம் நினைக்க முடியாது. ஒருவர் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதை தன் பாணியில் சமாளிக்க வேண்டும் என்றார்.
எதிர்பார்ப்பு உள்ளது
ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரர் ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரி அடிப்பார். ஆனால், நான் ஒன்று, இரண்டு என ரன்கள் எடுப்பேன். ஒவ்வொருவருக்கும் ஒரு ஆட்டம் உள்ளது. ஆனால், சூழ்நிலையை புரிந்து கொண்டு, முடிவு எடுக்க வேண்டும் என்பது நான் உட்பட, அனைத்து வீரர்களிடமும் எதிர்பார்க்கப்படும் என்றார் கோலி.
பண்ட் சிக்கல்
ரிஷப் பண்ட்டுக்கு தென்னாப்பிரிக்கா தொடர் தான் கடைசி வாய்ப்பு என்பது ரவி சாஸ்திரி - விராட் கோலியின் கடுமையான விமர்சனத்தில் இருந்தே தெரிகிறது. முதல் டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில், அடுத்த இரு டி20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பண்ட் தன்னை நிரூபிக்க வேண்டும்.