எட்ஜ்பாஸ்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 89 பந்துகளில் சதம் விளாசிய ரிஷப் பண்ட், தாம் எவ்வாறு இந்த இன்னிங்சை எதிர்கொண்டேன் என்று விளக்கம் அளித்தார்.
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயரிடம் பேட்டிங் வரிசையை மாற்றி கொண்டீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரிஷப் பண்ட் இல்லை என்று பதில் கூறினார். மேலும், இனி 5வது வரிசையில் தான் இனி களமிறங்குவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ஆம் என்று பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ரிஷப் பண்ட், நான் யார் பந்துவீசுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதை விட, அவர் பந்தை எப்படி வீசுகிறார் என்பதை தான் கவனித்து விளையாடுவேன். எந்த பந்துவீச்சாளர்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அடிப்பது இல்லை. பந்தை அடிக்க முடியும் என்று தோன்றினால் அடித்துவிடுவேன்.
முதல் 3-4 விக்கெட்கள் வீழ்ந்தவுடன் எங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது உண்மையே ஆனால் தொடர்ந்து உத்வேகத்துடன் எந்த முடிவையும் எதிர்பார்த்து வெள்ளடைய விளையாடாமல் ஆட்டத்தை எதிர்கொண்டோம் அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இதனிடையே ரிஷப் பண்டின் இன்னிங்ஸ் நான் பார்த்ததிலே சிறந்த ஒன்று என்று முன்னாள் இந்திய வீரரும் அதிரடி பேட்ஸ்மேனான சேவாக் தெரிவித்துள்ளார். ரிஷப் பண்டை பாராட்டியுள்ள வசிம் ஜாபர் தனது பேட்டிங் குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு பண்ட் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டு தெரிவித்தார்.