இந்திய அணியில் ரிஷப் பண்ட்
கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக அறிமுகம் ஆனார் ரிஷப் பண்ட். அந்த தொடரில் ஒரு அதிரடி சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அப்போது முதல் இந்திய ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.
தோனிக்கு மாற்று வீரர்
பின் ரிஷப் பண்ட் தோனிக்கு மாற்று வீரராகவும் மாறினார். 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெறாத நிலையில், ரிஷப் பண்ட் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக மாறினார்.
பேட்டிங் சொதப்பல்
அதன் பின் பேட்டிங்கில் பார்ம் இழந்து தவித்தார். அதனால், கடும் விமர்சனத்தை சந்தித்தார். எனினும், அணியில் தொடர்ந்து இடம் பெற்றார். விக்கெட் கீப்பிங்கில் செய்த சொதப்பல்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அதனால், அழுத்தத்தில் இருந்தார் ரிஷப் பண்ட்.
எதிர்கால வீரர்
அவருக்கு பதில் கேஎல் ராகுல் டி20 மற்றும் ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராக மாறினாலும், ரிஷப் பண்ட் தொடர்ந்து அணியின் முக்கிய வீரராகவே இருக்கிறார். தற்போது லாக்டவுனில் இருந்து கொண்டே ரிஷப் பண்ட் தன் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பல்வேறு விஷயங்களை டெல்லி கேபிடல்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் பேசினார்.
கடினமான வாழ்க்கை
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஷப் பண்ட், அங்கே கிரிக்கெட் அணி இல்லாததால் டெல்லி அணியில் ஆடினார். அதனால் பயிற்சி செய்ய மிகவும் சிரமப்பட்டுள்ளார். தந்தை மறைந்த நிலையில், தாயின் வருமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு கிரிக்கெட் பயிற்சிகள் மேற்கொள்ளவும் சிரமப்பட்டுள்ளார்.
இரவில் பயணம்
டெல்லியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டி இரவு 2 மணிக்கு பேருந்து ஏறி நடுங்கும் குளிரில், ஆறு மணி நேரம் பயணம் செய்து தான் டெல்லி சென்றதாகவும், இலக்கை அடைய கடினமான உழைப்பு தேவை எனவும் கூறினார் ரிஷப் பண்ட்.
அந்த ஐபிஎல் தருணம்
இந்த நிலையில் அவரது வாழ்வை மாற்றிய அந்த தருணம் 2016 ஐபிஎல் தொடரில் வந்தது. டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேபிடல்ஸ்) அணி அவரை 1.9 கோடி கொடுத்து வாங்கியது. அதுவரை சிரமப்பட்டுக் கொண்டு இருந்த ரிஷப் பண்ட் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறினார்.
2018 ஐபிஎல் சீசன்
அதன் பின் 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி மிக மோசமாக தோல்வி அடைந்த போது அந்த அணியில் அதிக ரன் எடுத்தவராக வலம் வந்து ஆறுதல் அளித்தார் இளம் வீரர் ரிஷப் பண்ட். அதைத் தொடர்ந்து இந்திய அணியிலும் காலடி எடுத்து வைத்தார்.
மாறிய வாழ்க்கை
ஒரு காலத்தில் பயிற்சி மேற்கொள்ளவே சிரமப்பட்ட ரிஷப் பண்ட், தற்போது ஐபிஎல், இந்திய அணி என பிஸியாகி விட்டார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிக்கி பாண்டிங் மற்றும் கங்குலியின் ஆலோசனைகளை பெற்று 2019 ஐபிஎல் தொடரிலும் கலக்கினார் பண்ட்.