தோனிக்கு மாற்றாக ரிஷப்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பந்த் இறக்கப்பட்டுள்ளார். இதனால் தோனியை போல செயல்பட வேண்டும் என்ற நெருக்கடி அவருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் அளிக்கப்படுகிறது.
சரியாக விளையாடாத ரிஷப்
கடுமையான நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் சமீப போட்டிகளில் ரிஷப் பந்த் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அளிக்கவில்லை. இதனால் அவர் மைதானங்களில் ரசிகர்களின் கேலிகளுக்கு ஆளாகி வருகிறார்.
கேப்டன் கோலி காட்டம்
மைதானங்களில் தோனியின் பெயரால் ரிஷப் பந்த், கேலிக்குள்ளாக்கப்படுவது குறித்து சமீபத்தில் கேப்டன் விராட் கோலி காட்டம் தெரிவித்திருந்தார். இது முறையான செயல் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரையன் லாரா ஆலோசனை
21 வயதான ரிஷப் பந்த், பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் மேலும் அனுபவம் பெற அனுமதிக்க வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா கேட்டுக் கொண்டுள்ளார்.
ரிஷப் மீது அதிக அழுத்தம்
எம்.எஸ்.தோனியின் இடத்தை உடனடியாக அவர் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்மீது பல்வேறு தரப்பிலும் அழுத்தங்கள் வைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய பிரையன் லாரா, ஆனால் ரிஷப் பந்த் முற்றிலும் மாற்று வீரர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிஷப்மீது தேவையற்ற அழுத்தம்
உலக கோப்பை துவங்குவதற்கு இன்னும் 8, 9 மாதங்களே உள்ள நிலையில், மற்றொரு தேர்ந்த விக்கெட் கீப்பரை கொண்டு விளையாட இந்திய அணி முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பிரையன் லாரா, ரிஷப் பந்த் மீது தேவையற்ற அழுத்தத்தை திணிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.