மும்பை: ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது தன்னை சிதறடித்து விட்டதாக ரீத்து ராணி அழுதபடி கூறியுள்ளார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் குமுறல் வெளியிட்டுள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரீத்து ராணியின் கேப்டன்ஷிப்பும், அவரது திறமையான தொடர் முயற்சிகளும்தான். ஆனால் அனைவரையும் அதிர வைக்கும் வகையில் ரீத்து ராணியை கேப்டன் பதவியிலிருந்து தூக்கி விட்டது ஹாக்கி இந்திய அமைப்பு.
இதுகுறித்து ரீத்து ராணி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், நான் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளேன். எனக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
என்னை நீக்கியதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனக்கும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் நீல் ஹாகுட் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. இதுதொடர்பான வெளியான தகவல் முழுமையாக தவறு.
எனக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது ஒரு காரணமா என்று தெரியவில்லை. நான் எந்த முகாமுக்கும் வராமல் இருந்ததில்லை. பயிற்சிக்கு வராமல் இருந்ததில்லை. பயிற்சி முகாமுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த சமயத்தில்தான் நிச்சயதார்த்தத்தையும் வைத்துக் கொண்டேன். அதுதான் பிரச்சினைக்குக் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை.
இவ்வளவு காலமாக நான் ஹாக்கி விளையாடியது, அணியின் வெற்றிக்காக உழைத்தது எல்லாமே வீணாகிப் போய் விட்டது. எனது வருங்கால கணவர் மிகவும் அதிர்ச்சியுடன் உள்ளார்.
ஆண்கள் அணியின் கேப்டன் சர்தார் சிங் மீது கூட பல முக்கியப் புகார்கள் உள்ளன. அவரையும் கூட கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால் அவர் அணியில் நீடிக்கிறார். ஆனால் எந்தப் புகாரும் இல்லாத நான் அணியில் ஒரு சாதாரண வீராங்கனையாக கூட இல்லை என்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளார் ரீத்து ராணி.
ரீத்து ராணி தனது பேட்டியின்போது பலமுறை அழுதார்.