இளம் வீரர் ரியான்
19 வயதே ஆகும் இளம் வீரர் ரியான் பராக் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வருகிறார். கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 221 ரன்களை விரட்டிய போது மூத்த வீரர்களே தடுமாறி வந்தனர். சஞ்சு சாம்சன் ஒற்றை ஆளாக போராடி வந்தார். அப்போது 6வது வீரராக களமிறங்கி ரியான் பராக் 11 பந்துகளில் 25 ரன்கள் அடித்து தன்னால் முடிந்த உதவியை செய்தார். பவுலிங்கிலும் ஒரே ஒரு வீசிய அவர் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
அட்வைஸ்
இந்நிலையில் இக்கட்டான சூழலில் பேட்டிங் செய்தது குறித்து மனம் திறந்துள்ளார். அதில், கடந்த சீசனின் போது விராட் கோலியிடம் பேசினேன். அப்போது அவர், "நீ எப்போதும் ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்து ஆரஞ்ச் தொப்பியை வாங்கப்போவது இல்லை. ஏனென்றால் நீ 5, 6வது வீரராக களமிறங்குகிறார். எனவே அதிக ரன்கள் அடிப்பது குறித்து யோசிக்காதே, முக்கியமான நேரத்தில் அணிக்கு உதவும் 20 அல்லது 30 ரன்களை அடிப்பதை மட்டும் யோசி என்றார். இதனால் நான் அணிக்கு எது உதவுமோ அதை மட்டும் செய்து வருகிறேன்.
தாக்கம்
ஐபிஎல் குறித்து பேசிய அவர், நாம் மாநில அணிக்காக ஆடும் போது, இந்திய அணியின் சிறந்த வீரர்களுடன் சேர்ந்து ஆடுவோம். ஆனால் ஐபிஎல்-ல் பல அயல்நாட்டு முன்னணி வீரர்களான ஸ்மித், ஸ்டோக்ஸ், பட்லர், ஆர்ச்சர் போன்றோருடன் சேர்ந்து ஆடுகிறேன். இது நல்ல பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதே போல ஐபிஎல்-ல் விராட் கோலி, எம்.எஸ்.தோனி ஆகியோருக்கு எதிராக ஆடுவது மன ரீதியான பலத்தை கொடுக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஸ்கோர்
கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ரியான் பராக் இதுவரை 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 271 ரன்களை எடுத்துள்ளார். அதே போல 10 இன்ங்ஸ்களில் பந்துவீசியுள்ள அவர் 3 விக்கெட்களை எடுத்துள்ளார். மிகவும் இளம் வீரராக களம்கண்ட ரியான் பராக் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.