இமாலய இலக்கு
இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் - அசாம் அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜம்மு - காஷ்மீர் அணி, 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஷுபம் கஜூரியா 120, ஹெனன் நசீர் 124 ரன்கள் சேர்த்தனர். இதனால் அசாம் அணிக்கு 351 என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ரியான் பராக் அதிரடி
இந்த நிலையில் அசாம் அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ரியான் பராக் - ரிஷவ் தாஸ் களத்திற்குள் நுழைந்தனர். ரிஷவ் தாஸ் நிதானமாக விளையாட, ரியான் பராக் பட்டாசு போல் வெடிக்க தொடங்கினார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும், சிக்சருமாய் பந்து பறந்து கொண்டு இருந்தது.
12 சிக்சர், 12 பவுண்டரி
இதன் பலனாக 77 பந்துகளில் ரியான் பராக் சதம் விளாசி அசத்தினார். 30 ஓவர்களிலேயே அசாம் அணி 240 ரன்களை கடந்தது. இறுதியாக 12 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 116 பந்துகளில் 174 ரன்கள் எடுத்து ரியான் பராக் ஆட்டமிழந்தார். 351 என்ற இமாலய இலக்கை, அசாம் அணி 46வது ஓவரிலேயே எட்டி, விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது.
ரியான் பராக் பந்துவீச்சு
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கி சில அதிரடி சிக்சர்களையும், அசால்ட்டாக கேட்ச் பிடித்து குழந்தைத்தனமாக கொண்டாட்டத்தில் ஈடுபடும் அதே ரியான் பராக் தான் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் அணியின் சிறந்த பந்துவீச்சாளரின் ரன் ரேட் 7 ஆக இருக்கும் போது, ரியான் பராக் 6 ரன் ரேட்டில் வீசி அசத்தியுள்ளார்.
ருதுராக் கெயிக்வாட்
ருதுராஜ் கெயிக்வாட்டின் சாதனையை பார்த்த கண்கள், ரியாக் பராக்கின் அதிரடியை பார்க்காமல் கடந்துள்ளது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களில் பெரும்பாலானோர் தொடக்க வீரர்களாகவே உள்ளனர். இதனால் அண்மைக் காலமாக அந்தந்த பொசிஷனில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் அதிகம் எழுந்துள்ளன. ஆனால் இதுவரை ரியான் பராக் இந்தியா ஏ அணியில் கூட இடம்பெறவில்லை.
தேர்வுக் குழுவின் கண்கள்
21 வயது 18 நாட்களே ஆகும் ரியான் பராக் களத்தில் இவ்வளவு முதிர்ச்சியுடன் செயல்படுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. தோனியை ரோல் மாடலாக வைத்திருக்கும் ரியான் பராக், தோனியை போலவே தனியாளாக தன் மாநில கிரிக்கெட்டை தூக்கி நிற்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் ஏராளமான வீரர்கள் பக்கம், தேர்வுக் குழுவினரின் கண்கள் எப்போது திரும்பும் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.