அரையிறுதி போட்டி
சாலை பாதுகாப்பு டி 20 உலக தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகள் முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரையன் லாரா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதிரடி தொடக்கம்
இந்திய லெஜெண்ட்ஸ் சார்பாக ஓப்பனிங் களமிறங்கிய சேவாக் மற்றும் சச்சின் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். அதிரடிக்கு ஃபேமஸான, சேவாக் தொடக்க முதலே அட்டகாசம் செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தார் போல, 17 பந்துகளில் 35 ரன்கள் அடித்து கெத்து காட்டினார். இதில் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். அதே போல் மற்றொருபுறம் கேப்டன் சச்சின் தனது வழக்கமான கிளாஸ் ஆட்டத்தால் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் விளாசினார். இது இவரது தொடர்ச்சியான 2வது அரைசதமாகும். கடந்த போட்டியில் 37 பந்துகளில் 70 ரன்கள் அடித்திருந்தார்.
பெரிய ஸ்கோர்
இதன் பின்னர் களமிறங்கிய கைஃப் 27 ரன்களில் வெளியேற, அதிரடி மன்னர்கள் யூசஃப் பதான் மற்றும் யுவ்ராஜ் சிங் ஒன்று சேர்ந்து பந்துகளை செதறவிட்டனர். யூசுப் பத்தான் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுக்க, யுவராஜ் சிங் 20 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து ஆட்டமிழக்காமல் 78 ரன்களை 5 ஓவர்களில் சேர்க்க இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்களை குவித்தது.
கடும் போராட்டம்
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியில் நல்ல ஓப்பனிங் தேவைப்பட்ட நிலையில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. வில்லியம் பெர்கிங்ஸ் மன்பிரீத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நர்சிங் தியோநரைனுடன் ஜோடி சேர்ந்த டிவைன் ஸ்மித் சிறப்பாக ஆடினார். ஸ்மித் 9 பவுண்டரிகள் 2சிக்சர்களுடன் 36 பந்துகளில் 63 ரன்கள் விளாச மறுபுறம் தியோநரைன் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்தது.
பரபரப்பு
அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் பிரையன் லாரா 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 46 ரன்கள் விளாசி ஸ்கோரை 200 ரன்களுக்குக் கொண்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் கடும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் அவரை வினய் குமார் பௌல்டு ஆக்கி வெளியேற்றியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்தியா லெஜெண்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறு மற்றொரு அரையிறுதியில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.