ரோட் சேஃப்டி தொடர்
நடப்பு சாலை பாதுகாப்பு டி.20 தொடர் என்ற பெயரில் டி.20 தொடரில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய ஜாம்பவான்கள் அணி 4 வெற்றிகளுடன் ( 16 புள்ளி) முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் தங்களின் கடைசி லீக் போட்டியில் இந்திய ஜாம்பவான்கள் அணி, தென் ஆப்ரிக்க ஜாம்பவான்கள் அணியை நேற்று எதிர்கொண்டது.
யுவராஜ் சிங்
முதலில் பேட்டிங் செய்த இந்திய ஜாம்பவான்கள் அணியில் சேவாக் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். சச்சின் 37 பந்தில் 60 ரன்கள் விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் தனது பழைய ஆட்டத்தை மீண்டும் ரசிகர்களுக்கு காண்பித்தார். 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த யுவராஜின் ஆக்ரோஷத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அந்த ஆட்டத்தை நேற்று மீண்டும் காண முடிந்தது.
ருத்ரதாண்டவம்
தனது பேட்டிங் பசிக்கு தீனி போட்டுக்கொள்ள முடிவெடுத்த யுவராஜ் சிங் எதிரணியினரின் பந்துகளை நாளாபுறமும் சிதறடித்தார். 22 பந்துகளை எதிர்கொண்ட யுவராஜ் சிங் 52 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதில் ஜாண்டர் டி புரூன் வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் பறக்கவிட்டார் யுவராஜ் சிங். பழைய யுவ்ராஜின் ருத்ரதாண்டவத்தை மீண்டும் பார்த்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எனினும் அவர் ஏன் 5வது சிக்ஸருக்கு முயற்சி செய்யவில்லை என்ற வருத்தமும் ரசிகர்களிடையே உள்ளது.
ரியாக்ஷன்
இதுகுறித்து பேசிய யுவ்ராஜ் சிங், அந்த ஓவரில் மீதம் ஒரு பந்து இருந்தது என்று எனக்கு தெரியும். நான் தொடர்ந்து 5வது சிக்ஸரும் அடிப்பதற்கு தான் எதிர்நோக்கியிருந்தேன். ஆனால் ஆட்டத்தில் மீதம் 2 ஓவர்கள் உள்ளன. பிட்ச்சில் விக்கெட்டும் நன்றாக இருந்தது. எனவே கடைசிப் பந்தில் டாட் வைத்துவிட்டு மீதமுள்ள ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்த பார்த்தேன். இதை நான் செய்ததில் மகிழ்ச்சிதான் என தெரிவித்துள்ளார்.
அபார வெற்றி
யுவ்ராஜின் ஆக்ரோஷ ஆட்டத்தால் இந்திய ஜாம்பவான்கள் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது. கடின இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க ஜாம்பவான்கள் அணியில் தொடக்க வீரர்களை தவிர வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் இந்திய ஜாம்பவான்கள் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுவ்ராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.