சாலை பாதுகாப்பு டி 20 உலக தொடர்
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு டி 20 உலக தொடர் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நிறுத்தப்பட்ட போட்டிகள் ராய்ப்பூரில் புதிதாக கட்டப்பட்ட ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி போட்டிகள் நடந்து வருகிறது.
இந்தியா லெஜண்ட்ஸ் Vs பங்களாதேஷ் லெஜண்ட்ஸ்
வீரேந்தர் சேவாக், பிரையன் லாரா, முத்தையா முரளிதரன் என பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் போட்டியைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த போட்டிகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கியது. மார்ச் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் Vs பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் பங்கேற்ற போட்டி இன்று நடந்தது.
மீண்டும் யுவராஜ் சிங்
இந்தியாவின் லெஜண்ட்ஸ் சச்சின், சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்டோர் என கனவு நாயகர்கள் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு களம் புகுந்ததால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நமன் ஓஜா இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். முதலில் பேட் செய்த பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு சுருண்டது.
பட்டாசாய் வெடித்த சேவாக்
இந்தியாவின் யுவராஜ் சிங், இர்பான் பதான், ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். பின்னர் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே இந்தியாவின் பழைய ஓப்பனிங் காம்போ சச்சின்-சேவாக் களமிறங்கினார்கள். எனக்கா வயசாயிடுச்சா? என்பதுபோல் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விளாசினார் சேவாக். தொடர்ந்து முதல் ஓவரிலேயே 3 பவுண்டரி அவர் கடாச ரசிகர்கள் அளவில்லா உற்சாகத்தில் மிதந்தனர்.
கிளாசிக் ஷாட்டுகளால் பிரமிக்க வைத்த சச்சின்
அடுத்தது கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் பேட்டிங். தனது பழைய கிளாசிக் ஷாட்டுகள் மூலம் அவர் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப இது நனவா? இல்லை கனவா? என்று ரசிகர்கள் தங்களை கிள்ளிப் பார்த்துக் கொண்டனர். தொடர்ந்து சேவாக் சிக்சரும், பவுண்டரியுமாக பறக்க விட்டு ரசிகர்களை இன்பத்தில் மிதக்க வைத்தார். இறுதியில் இந்தியா லெஜண்ட்ஸ் 10.1 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று பிரமிக்க வைத்தது.
உற்சாக வெள்ளத்தில் நீந்திய ரசிகர்கள்
சேவாக் 35 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்கள் குவித்தார். சச்சின் 26 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்தார். தங்களின் கனவு நாயகர்கள் களத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ருத்ரதண்டம் ஆடியது கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி எல்லைக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.