பகலிரவு டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இன்றைய தினம் துவங்கி நடைபெறவுள்ளது. இதுவரை விளையாடியுள்ள இரண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் தோல்வியும் கண்டுள்ளது இந்தியா. இந்நிலையில் இன்றைய தினம் 3வது பகலிரவு போட்டியில் விளையாடவுள்ளது.
சமநிலையில் அணிகள்
சென்னையில் நடைபெற்றுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு போட்டிகளும் ரசிகர்களுக்கு சிறப்பான தருணங்களை தந்த நிலையில் தற்போது இந்த பகலிரவு போட்டி மேலும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாம்பவான்கள் பங்கேற்பு
இந்நிலையில் இதற்கு இணையாக மற்றொரு பக்கம் முன்னாள் ஜாம்பவான்கள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு உலக தொடர் 2021 வரும் 5ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், ஜாகீர் கான், பிரட் லீ, பிரையன் லாரா, ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த தொடர் கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு கொரோனாவால் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
முழு அட்டவணை வெளியீடு
இந்நிலையில் இந்த தொடரை தொடர்ந்து நடத்த பிசிசிஐ முடிவெடுத்து தற்போது அதற்கான முழு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஜாம்பவான்கள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளனர். ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் இந்த தொடரில் விளையாடாத நிலையில் வங்கதேச ஜாம்பவான்கள் பங்கேற்கவுள்ளனர்.
21ம் தேதி இறுதிப்போட்டி
வரும் 5ம் தேதி இந்த தொடர் துவங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதவுள்ளன. குரூப் ஸ்டேஜை தொடர்ந்து 4 அணிகளும் வரும் மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அரையிறுதியிலும் தொடர்ந்து 21ம் தேதி இறுதிப்போட்டியிலும் மோதவுள்ளன.
ரசிகர்களுக்கு அனுமதி
முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா உள்ளிட்டவர்களுக்கு தற்போதும் ரசிகர்கள் அதிகளவில் காணப்படும் நிலையில், அவர்கள் மீண்டும் மைதானத்தில் இறங்கி விளையாடுவது கடந்த ஆண்டில் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்தது. அது தற்போது தொடரவுள்ளது. இந்த போட்டிகளில் ரசிகர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.