சாலை பாதுகாப்பு உலக தொடர் 2021
சர்வதேச அளவில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும்வகையில் சாலை பாதுகாப்பு உலக தொடர் 2021 ராய்ப்பூரின் ஷாகீர் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் அரையிறுதியை எட்டியுள்ளது. இன்றைய தினம் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் லெஜெண்ட்கள் அரையிறுதியில் மோதவுள்ளனர்.
அரையிறுதிப் போட்டி
கடந்த போட்டியில் இங்கிலாந்து லெஜெண்ட்சுடன் மோதிய மேற்கிந்திய தீவுகள் லெஜெண்ட் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதையடுத்து இன்றைய தினம் இந்தியாவுடன் மேற்கிந்திய தீவுகள் மோதவுள்ளது. முன்னதாக இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான்களுடன் மோதிய இந்தியா அணி தற்போது அரையிறுதியில் மீண்டும் மேற்கிந்திய தீவுகளுடன் மோதவுள்ளது.
5 வெற்றிகள்
இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 போட்டிகளில் இந்திய ஜாம்பவான்கள் வெற்றி பெற்றுள்ளனர். இங்கிலாந்துடனான ஒரு போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. 5 வெற்றிகளை தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் லீக் ஸ்டேஜை இந்தியா முடித்துள்ளது.
3 வெற்றிகள்
இதேபோல மேற்கிந்திய தீவுகள் அணி ஆடியுள்ள 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், ஆர் வினய்குமார் ஆகியோர் இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அதிகமாக ஸ்கோர் செய்யாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
டெண்டுல்கர் -சேவாக் ஜோடி
கடந்த போட்டிகளை போலவே டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கி இந்தியாவிற்கு சிறப்பான துவக்கத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணியுடன் போட்டியிட்டு வெற்றி கொண்டுள்ள இந்திய ஜாம்பவான்கள் அதை இந்த போட்டியிலும் தொடர தீவிரம் காட்டுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.