அரையிறுதி போட்டி
சாலை பாதுகாப்பு டி 20 உலக தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகள் முன்னேறின. இதில் ஏற்கனவே சச்சினின் இந்தியா லெஜெண்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா - இலங்கை லெஜெண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
மோசம்
இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க லெஜெண்ட்ஸ் அணியில், தொடக்க வீரர் மோர்னே வான் விக்கை தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. அனைவரும் அடுத்தடுத்து வந்த வேகத்தில் பெவிலியின் திரும்பினர். பொறுப்புடன் ஆட வேண்டிய கேப்டன் ஜாண்டி ரோட்ஸ் 4 ரன்களுக்கு வெளியேறினார். மறுமுனையில் தனி ஆளாக போராடிய வான் விக் 57 ரன்களை எடுத்தார். இதனால் 125 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய குலசேகரா 5 விக்கெட்களை எடுத்தார்.
சிறப்பான
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் தில்சன் மற்றும் ஜெயசூர்யா இருவருமே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய உபுல் தரங்கா மற்றும் ஜெயசிங்கே ஆகியோர் எளிய இலக்கு என்பதால் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினர். இதனால் அந்த அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பொறுப்புடன் ஆடிய உபுல் தரங்கா 39 ரன்களுடனும், ஜெயசிங்கே 47 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஃபைனல்ஸ்
சாலை பாதுகாப்பு டி20 தொடரின் லீக் போட்டிகள் ராய்ப்பூரில் நடைபெற்ற நிலையில் இறுதிப்போட்டி வரும் மார்ச் 21ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுமே இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுமே சமபலம் கொண்ட அணிகள் என்பதால் இறுதிப்போட்டியில் லெஜெண்ட்ஸ்களின் தீவிர ஆட்டத்தை காணலாம்.