கொல்கத்தா: ஐபிஎல் போட்டிகளில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனைய வைத்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ராபின் உத்தப்பா இன்று முறியடித்தார்.
இதில் ராபின் உத்தப்பா ஒரிஜினல் பெங்களூர்க்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் குவாலிஃபயர் போட்டியின்போது இந்த சாதனையைப் படைத்தார் உத்தப்பா.
இன்று உத்தப்பா அதிரடியாக ஆடி 42 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் இந்த சீசனில் அவர் மொத்தம் 655 ரன்களைக் குவித்தார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது விராத் கோஹ்லி 634 ரன்களைக் குவித்திருந்ததே அதிகபட்சமாக ஒரு தொடரில் ஒரு வீரர் எடுத்த ரன்களாக இருந்தது. அதை இன்று உத்தப்பா முறியடித்தார்.
இன்று போட்டியில் ஆட வந்தபோது உத்தப்பா 14 போட்டிகளில் 613 ரன்களைக் குவித்து வைத்திருந்தார். நடப்பு தொடரிலும் அதிக ரன்கள் எடுத்த வீரராக உத்தப்பாவே நீடிக்கிறார்.
ஏற்கனவே டுவென்டி 20 போட்டிகளில் 9 முறை 40 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களைக் குவித்து உலக சாதனையும் படைத்துள்ளார் உத்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
கடந்த 2010ம் ஆண்டில் அப்போதைய மும்பை இந்தியன்ஸ் வீரர் சச்சன் டெண்டுல்கர் அதிக ரன்களைக் குவித்து அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவராக உருவெடுத்தார். மேலும் அதிக ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரராகவும் அவர் அப்போது திகழ்ந்தார். அதற்குப் பின்னர் தற்போது உத்தப்பாவும் அந்தப் பெருமையை நிகழ்த்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இதற்கு முன்பு கிறிஸ் கெய்ல் 2 முறையும், ஷான் மார்ஷ் ஒருமுறையும், மாத்யூ ஹெய்டன் ஒருமுறையும், மைக் ஹஸ்ஸி ஒரு முறையும் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்றனர். இந்தியர்கள் என்றால் சச்சின் மட்டுமே அந்த சாதனையைப் படைத்துள்ளார். இப்போது உத்தப்பாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.
மழை காரணமாக இன்று போட்டி
நேற்று நடக்கவிருந்த இந்தப் போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.