துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன் முதலாக களமிறங்கும் வாய்ப்பு உத்தப்பாவுக்கு கிடைத்துள்ளது. தன் திறமையை நிரூபிப்பாரா?
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செம்.19ம் தேதி தொடங்குகிறது.
இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரின் ஃப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2வது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என அனைத்து அணிகளும் இப்போது அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், கரண் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், கே.எம்.ஆசிப் உள்ளிட்ட வீரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே துபாய்க்கு சென்று, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை.. அதாவது 2020 சீசனில் இதே அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முதலாக ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. எனினும், இந்த 2021 சீசனில், இந்தியாவில் நடந்த முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று கம்பீரமாக இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கூட இவ்வளவு ரன் ரேட் கிடையாது.
டெல்லி அணிக்கு எதிராக முதல் போட்டியிலும், கொரோனா காரணமாக தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக விளையாடிய மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை தோல்வி அடைந்திருந்தது. தற்போது சிஎஸ்கே வைத்திருக்கும் புள்ளிகள் 10. மேற்கொண்டு இன்னும் 6 புள்ளிகள் சேர்த்தாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடலாம். அதாவது, இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே போதும். கைவசம் 7 போட்டிகள் மீதமுள்ளன. ஆனால், சென்னை அணி இப்போது சந்திக்கவுள்ள மிக முக்கிய பிரச்சனை டு பிளசிஸ் காயம் தான். கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய டு பிளசிஸ் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் 64.00 ஆவரேஜுடன் 320 ரன்களை குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 145.45. இதில், நான்கு அரைசதங்கள் அடங்கும். அப்படிப்பட்ட அபார ஃபார்மில் இருக்கும் டு பிளசிஸ் காயம் சென்னை அணிக்கு நிச்சயம் சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி
அதேசமயம், இதில் மற்றொரு நல்ல விஷயம் என்னவெனில், இதுவரை சென்னை அணியில் விளையாட வாய்ப்பே கிடைக்காமல் இருந்த ராபின் உத்தப்பா, மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டு பிளசிஸுக்கு பதில், ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக உத்தப்பா களமிறங்குவார் என்று தெரிகிறது. சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஒரு போட்டியில் கூட உத்தப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கியது. கடந்த இரண்டு வருடமாக இவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. குறிப்பாக கடந்த 2 சீசன்களிலும் அவர் 300 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட ரூ.3 கோடிக்கே சி.எஸ்.கே அவரை வாங்கியது. ஐபிஎல் போட்டியில் கடந்த 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராபின் உத்தப்பா 4607 ரன்களை குவித்துள்ளார். சென்ன சூப்பர் கிங்ஸ், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் 6வது அணியாகும்.