மும்பை இந்தியன்ஸ் வீரர்
ஐபிஎல் 2021 தொடரில் மும்பை அணிக்காக விளையாடவுள்ளார் லெக் ஸ்பின்னர் ராகுல் சஹர். கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தொடர்ந்து வெற்றி கொண்டுள்ள நிலையில் இரு தொடர்களிலும் அவர் அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி
கடந்த 2019ல் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ராகுல் சஹர் அதையடுத்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முக்கிய விக்கெட்டுகளான டேவிட் மலன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதிகமான நம்பிக்கை
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவும் இந்திய அணியில் விராட் கோலியும் தன் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து செயல்படுவதாக ராகுல் சஹர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நம்மீது நமது கேப்டன் நம்பிக்கை வைத்தால் நமது தன்னம்பிக்கை வானம் அளவிற்கு உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரோகித் சாத்தியப்படுத்துவார்
தொடர்ந்து பேசிய அவர் இந்த முறை ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6வது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜாகிர் கான் போன்ற சிறப்பான பயிற்சியாளரின் கீழ் அனைவரும் சிறப்பாக விளையாடி இதை சாத்தியப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.