இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை கண்ட இந்திய அணி இரண்டாவது போட்டியில் சுதாரித்து சிறப்பான வெற்றியை அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரக 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கொண்டுள்ளது.
160 ரன்கள் குவிப்பு
இந்த போட்டியில் துவக்க வீரர் ரோகித் சர்மா 160 ரன்களையும் ரவி அஸ்வின் 106 ரன்களையும் ரிஷப் பந்த் அவுட்டாகாமல் 58 ரன்களையும் குவித்துள்ளனர். அக்சர் படேல், ரவி அஸ்வின் உள்ளிட்டவர்களும் பௌலிங்கில் கலக்கியுள்ளனர். ரவி அஸ்வின் நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து 5 விக்கெட்டுகள் சாதனையை புரிந்துள்ளார்.
ரோகித் 9 இடங்கள் முன்னேற்றம்
இந்நிலையில் இந்த சாதனைகள் ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் எதிரொலித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ரோகித் சர்மா 9 இடங்கள் முன்னேறி 14வது இடத்தில் நிலைகொண்டுள்ளார். கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருந்த அவர் அதன்பிறகு தற்போது தான் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார்.
பௌலர்கள் வரிசையில் 7வது இடம்
இதேபோல ரவி அஸ்வினும் கடந்த போட்டியில் சதமடித்துள்ள நிலையில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி 81வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் பௌலர்கள் வரிசையில் 7வது இடத்திலேயே நிலை கொண்டுள்ளார். இதனிடையே ரிஷப் பந்த் 11வது இடத்திலேயே தொடர்கிறார்.
தரவரிசையில் முதல்முறையாக இடம்
இடதுகை ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 50வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் கடந்த போட்டியின்மூலம் தனது அறிமுக போட்டியில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல் டெஸ்ட் தரவரிசையில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள இடம் 68.