நியூசிலாந்து ஆதிக்கம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின், முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர். பிறகு, நேற்று நடந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
மாற்று நாள் ஆட்டம்
இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி எல்பிடபிள்யூ ஆக்கினார். நேற்றைய 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன்.23) மாற்று நாளில் தொடங்கிய ஆட்டத்தில், கேப்டன் கோலி மிக விரைவாக 13 ரன்களில், ஜேமிசன் ஓவரில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அதேபோல், புஜாராவும் 15 ரன்களில் ஜேமிசன் பந்தில் வெளியேறினார். பிறகு ரஹானேவை 15 ரன்களில் போல்ட் வெளியேற்ற, இந்தியா லன்ச்சுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
பொறுமைக்கு நேரமில்லை
இந்நிலையில், இன்றைய 6வது நாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, ரோஹித் மிக சீரியஸாக ரிஷப் பண்ட்டுக்கு அளித்த அட்வைஸ் தற்போது இந்திய அணிக்கு ஒர்க் அவுட் ஆகி வருவதாக தெரிகிறது. அதாவது, போட்டி தொடங்குவதற்கு முன்பு ரிஷப் பண்ட்டிடம் பேசிய ரோஹித், "இன்றைய கடைசி நாளில் விக்கெட்டுகள் ஒருவேளை அடுத்தடுத்து வீழும் பட்சத்தில் நீ உன் வழக்கத்துக்கு மாறாக பொறுமையாக விளையாட நினைக்காதே. விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும், நீ அடித்து ஆடு. ஏனெனில், பொறுமையாக விளையாடிக் கொண்டிருக்க நமக்கு நேரமில்லை" என்று அவர் கூறியதாக தகவல் வெளியானது.
பண்ட் அதிரடி
ரோஹித் கணித்தது போலவே, இந்தியா கோலி, புஜாரா, ரஹானே ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. அதேசமயம், ரோஹித் சொன்னது போலவே ரிஷப் பண்ட், நியூசிலாந்து பவுலர்களை அட்டாக் செய்யும் விதமாகவே விளையாடி வருகிறார். அவர் இதுவரை அடித்திருக்கும் 25 ரன்களில், 16 ரன்கள் பவுண்டரிகளில் வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இருப்பினும் ஒட்டுமொத்தமாக இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருப்பதால், நியூசிலாந்து கைகளே தற்போது ஓங்கியுள்ளது.