துணை கேப்டன் ரோகித்
இந்திய குறைந்த ஓவர்கள் போட்டிகளின் துணை கேப்டன் ரோகித் சர்மா, குறைந்த ஓவர்கள் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டங்களை எப்போதுமே வெளிப்படுத்தி வருபவர். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ந்து இடம் பெறுவதில்லை. அவரது 100 சதவிகித ஆட்டம் டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுவதில்லை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆட்டம்
இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தனது பிட்னசை வெளிப்படுத்தி மிகுந்த நெருக்கடிகளுக்கு பின்பே தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். துணை கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார்.
குறைவான பயிற்சி ஆட்டங்கள்
கடந்த மாதத்தில் ஆஸ்திரேலியா வந்த அவர், குவாரன்டைன் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு, கடந்த வாரத்தில்தான் இந்திய அணியில் இடம்பெற்றார். அதையடுத்தே அவர் பயிற்சி ஆட்டங்களில் விளையாட முடிந்தது. ஆயினும் கடந்த இரு தினங்களில் அவரது பயிற்சி ஆட்டங்கள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
அணியின் பலம்
ரவி அஸ்வின் உள்ளிட்ட இந்திய அணியின் சிறந்த பௌலர்களின் பந்துவீச்சை சமாளித்து மிகவும் சிறப்பாக அவர் வலை பயிற்சிகளில் ஈடுபட்டார். அணி நிர்வாகம் மற்றும் கேப்டனும் தங்களது பேட்டிகளில் இதை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவரது சேர்ப்பு அணியின் மிகச்சிறந்த பலமாகவே பார்க்கப்படுகிறது.
இறுதி டெஸ்ட் போட்டி
ஆயினும் கடந்த 2019 நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியே ரோகித் சர்மா இறுதியாக மைதானத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டி. இந்நிலையில் பயிற்சி ஆட்டங்கள் தவிர்த்து வேறெந்த பயிற்சியும் இன்றி நேரடியாக தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார் ரோகித் சர்மா.
குறைவான நெட் பயிற்சிகள்
காயம் காரணமாக நெட் பயிற்சிகளும் அதிகளவில் இல்லாமல், பிட்னஸ் சோதனை, குவாரன்டைன் என அவர் நெருக்கடிகளை கடந்து வந்துள்ள நிலையில், தற்போது மிகவும் குறைவான நெட் பயிற்சிகளுடன் ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ், ஸ்டார்க், ஹாசல்வுட் போன்ற முன்னணி பௌலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ளவுள்ளார் ஹிட்மேன்.
சிறப்பான துவக்கத்தை அளிப்பார்
ஆயினும் எப்போதுமே தன்னுடைய ஹிட்மேன் என்ற பெயருக்கேற்ப அவர் தனது அதிரடியை அடுத்த இரு போட்டிகளிலும் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிட்னியில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்க வீரராக களமிறங்கவுள்ளார் ரோகித். இந்நிலையில் அவர் சிறப்பான துவக்கத்தை இந்திய அணிக்கு ஏற்படுத்தி தருவார் என்று நம்பப்படுகிறது.