கால்பந்தாட்ட தொடரின் தூதர்
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ள ரோகித் ஷர்மா, பல்வேறு பிராண்ட்களின் தூதராக நியமிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஸ்பெயினில் நடைபெறவுள்ள லா லிகா கால்பந்து தொடரின் இந்திய தூதராக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோகித் ஷர்மாவிற்கு பெருமை
லா லிகாவின் இந்திய தூதராக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டதன்மூலம் கால்பந்தை சேராத முதல் தூதர் என்ற பெருமை ரோகித் ஷர்மாவிற்குகிடைத்துள்ளது.
விளம்பர நடவடிக்கைகள்
கடந்த 2017ல் இந்தியாவில் கால்பதித்துள்ள லா லிகா, இந்திய மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அதன் நிர்வாக இயக்குநர் ஜோஸ் ஆன்டானியோ கச்சாஸா தெரிவித்துள்ளார்.
கச்சாஸா மகிழ்ச்சி
லா லிகாவின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் ஷர்மா, கால்பந்தாட்டம் மற்றும் லா லிகாவின் தீவிர ரசிகர் என்று தெரிவித்துள்ள கச்சாஸா, இந்த நியமனம் கால்பந்து ரசிகர்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
5 ஆண்டுகளாக வளர்ச்சி
இந்நிலையில் இந்தியாவில் கால்பந்தாட்டத்திற்கான அதிக ரசிகர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாகியுள்ளதாகவும் அதன் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதாகவும் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
"ரசிகர்களை இணைக்க காத்திருக்கிறேன்"
கால்பந்தாட்டம் போன்ற அழகான விளையாட்டின் தூதராக தான் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள ரோகித் ஷர்மா, இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களை லா லிகாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட தான் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.