நாக்பூர்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், டாஸ் போடுவதில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. இதன்பின்னர் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இரு அணிகளுக்கும் 2 ஓவர்கள் பவர் ப்ளே என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு, பும்ரா, ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மேத்யூ வேட் மற்றும் ஆரோன் ஃபின்ச்சின் அபாரமான ஆட்டத்தால் 8 ஓவர்களுக்கு 90/5 ரன்கள் சேர்த்தது.
மரண மாஸ் காட்டிய மேத்யூ வேட்.. பவுலிங்கில் அசத்திய அக்சர் படேல்.. இந்திய அணிக்கு 91 ரன்கள் இலக்கு!
இதனைத்தொடர்ந்து 91 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா - கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை நட்சத்திர வீரர் ஹேசல்வுட் வீச, ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து இரு இமாலய சிக்சர்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.
172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசியதன் மூலம் 174 சிக்சர்கள் விளாசி ரோஹித் ஷர்மா சாதனை படைத்துள்ளார். இதனால் ரோஹித் ஷர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.