ரோகித் சர்மா பிறந்தநாள்
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட்டின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தன்னுடைய 33வது பிறந்தநாளை இன்று தன்னுடைய வீட்டிலேயே எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தார். அவருக்கு முன்னாள் மற்றும் சக வீரர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
ரோகித் சர்மாவின் சாதனை
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா. மேலும் தனிப்பட்ட வீரராகவும் இந்த வடிவத்தில் சாதனைப்படைத்துள்ளார் ரோகித் சர்மா. கடந்த 2014ல் ஈடன் கார்டனில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 173 பந்துகளில் 264 ரன்களை ரோகித் குவித்தது சாதனையாக உள்ளது.
9 போட்டிகளில் 648 ரன்கள்
இதேபோல கடந்த 2019 உலக கோப்பை தொடரிலும் 9 போட்டிகளில் விளையாடி 648 ரன்களை குவித்துள்ளார் ரோகித் சர்மா. இந்த தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையும் ரோகித்திற்கு கிடைத்தது. மேலும் இந்த தொடரில் 81.00 என்ற சராசரியையும் ரோகித் பெற்றிருந்தார். இந்த தொடரில் 5 சதங்களை குவித்து, முந்தைய சாதனையான குமார சங்ககாராவின் 4 சதங்கள் என்ற சாதனையையும் ரோகித் முறியடித்திருந்தார்.
கவுதம் கம்பீர் புகழாரம்
இந்நிலையில், ஒயிட்பால் கிரிக்கெட்டில் உலகிலேயே மிகச்சிறந்த ஆட்டக்காரர் ரோகித் சர்மா தான் என்று முன்னாள் ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ரோகித்தின் 33வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கம்பீர், அவருக்கு இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக அமைய வாழ்த்தியுள்ளார்.