நல்ல அடிதளம்
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 60 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான அடிதளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோகித் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களை குவித்து அவுட்டானார். குறைந்த ரன்கள் என்றாலும் அவர் காட்டிய அதிரடியை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
புது சாதனை
இந்நிலையில் சாதனை ஒன்றையும் அவர் படைத்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக இத்தனை வருடங்களாக எம்.எஸ்.தோனி தான் இருந்தார். அவர் 123 சிக்ஸர்களை இந்தியாவில் அடித்திருந்தார். ஆனால் இன்று ரோகித் சர்மா தனது 125வது சிக்ஸரை அடித்து முதலிடத்தை பிடித்தார். இந்த சாதனை எடுத்துக்கொள்ள அவருக்கு 238 போட்டிகள் தேவைப்பட்டுள்ளது.
சச்சினுக்கான இடம்
இந்த பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 71 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார். யுவ்ராஜ் சிங் 4வது இடத்தில் இருக்கிறார். இந்த டாப் 4 பட்டியலில் ரோகித் மட்டுமே தற்போதும் விளையாடி வருகிறார். இதுவரை அவர் ஒருநாள் கிரிக்கெடில் 10,000 ரன்களை கடந்து குவித்துள்ளார். இதில் 29 சதங்களும் அடங்கும்.
மோசமான சாதனை
இது ஒருபுறம் இருக்க, மோசமான சாதனையும் ரோகித் சர்மாவை விரட்டி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா கடந்த 50 இன்னிங்ஸ்களாக ஒரு சதத்தை கூட அடிக்காமல் விளையாடி வருகிறார். இலங்கை அணியுடனான தொடரில் சதத்திற்கு அருகில் சென்ற போதும் தவறவிட்டார். இதனால் கோலிக்கு வந்த அதே சிக்கல் ரோகித்திற்கும் வந்துள்ளது.