சிறப்பான பவுலிங்
இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருப்பதாக சமீப காலமாக விமர்சனங்கள் இருந்த சூழலில், நேற்று அதற்கெல்லாம் பதில் தரப்பட்டது. ஏனென்றால் 9 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை எடுத்துவிட்டனர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், தீபக் சஹார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
அஸ்வின் ரெக்கார்ட்
ஆனால் இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அஸ்வின் தான். 4 ஓவர்களை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்த ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றார். இப்படிப்பட்ட பெருமையை பெற்ற போதும், அவருக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்.
என்ன காரணம்
யுவேந்திர சாஹல் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கும் போதிலும் விக்கெட் எடுக்கவில்லை என்பதால் அஸ்வின் சேர்க்கப்பட்டார். அஸ்வின் எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளை செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதன்படியே நேற்றும் செய்து, தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ரன்னே அடிக்க முடியாதபடி செய்தார். ஆனால் ஒரு விக்கெட் கூட வரவில்லை. அவரிடம் சமீப காலமாக உள்ள பிரச்சினையே அதுதான். ரன்ரேட்டை கட்டுப்படுத்துவதற்காக பேட்ஸ்மேன் அடிக்க முடியாத அளவிற்கு போடுகிறார். ஆனால் பேட்ஸ்மேனை அடிக்க வைத்தால் தானே விக்கெட் கிடைக்கும்.
ஸ்ரீகாந்த் அறிவுரை
அதாவது பேட்ஸ்மேன் டிஃபண்ட் ஷாட் மட்டுமே அடிக்க வேண்டும் என்பதற்காக லெந்த்-களை தேர்வு செய்கிறார். இதனை கவனித்த முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பந்தை தூக்கி போடுங்க, அப்போதானே விக்கெட் கிடைக்கும் என அறிவுரை கூறியிருந்தார். இதனால் தான் இந்திய அணியிலும் அவரை புறகணித்து வருகின்றனர்.
காரணம் என்ன
தற்போதைய இந்திய அணியை பொறுத்தவரையில் மிடில் ஓவர்களில் விக்கெட்கள் எடுக்கக்கூடிய பவுலர்கள் தான் தேவைப்படுகிறார்கள். அஸ்வின் ஓவரில் டிஃபண்ட் ஷாட் அடிக்கும் பேட்ஸ்மேன்கள், மற்ற பவுலர்களை அடிக்கிறார்கள். எனவே இனி ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் டேக்கிங் ஆப்ஷனாக இருந்தால் மட்டுமே அணிக்குள் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.