பும்ராவின் விலகல்
கடந்த சில மாதங்களாக காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய தொடரில் தான் அணிக்கு திரும்பினார். எனினும் முழு உடற்தகுதி பெறாததால் அவரால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் டி20 உலகக்கோப்பையில் ரிஸ்க் வேண்டாம் எனக்கூறி அவர் விலகியுள்ளார்.
அஸ்வினுக்கு இடம்?
இதனையடுத்து பும்ராவுக்கு மாற்றாக முகமது ஷமி, தீபக் சஹார், ஆவேஷ் கான், முகமது சிராஜ் என பல வீரர்களின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பும்ராவின் விலகியதினால் முதலில் அஸ்வினை தான் ப்ளேயிங் 11ல் உறுதி செய்ய வேண்டும். இதற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளது.
என்ன காரணம்
இந்திய அணியின் பவுலிங் சமீப காலமாக மோசமாக இருந்து வருகிறது. அக்ஷர் பட்டேலை தவிர்த்து புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல் அர்ஷ்தீப் சிங் என அனைவருமே ரன்களை வாரி கொடுக்கின்றனர். ரன்ரேட்டை கட்டுப்படுத்த பும்ரா இருப்பார் என்ற நம்பிக்கையும் தற்போது உடைந்துவிட்டது. இதே போல மிடில் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இல்லை.
மிடில் ஓவரில் தாக்கம்
எனவே ஓப்பனிங் மற்றும் டெத் ஓவர்களில் ரன்கள் கசிந்தாலும், மிடில் ஓவர்களில் ரன்ரேட்டை கட்டுப்படுத்த அஸ்வின் நிச்சயம் உதவுவார். கடைசியாக நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20ல் கூட 4 ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். எனவே அக்ஷர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மிடில் ஓவர்களில் கூட்டணி சேர்ந்தால் எதிரணிக்கு ரன் அடிக்க முடியாத சிரமத்தை உண்டாக்கலாம்.