ஸ்போர்ட்ஸ்கீடாவிற்கு பேட்டி
நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த பௌலராக விளங்குபவர் லாக்கி பெர்குசன். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இங்கிலாந்திடம் நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தோற்ற நிலையிலும் அந்த தொடரில் 21 விக்கெட்டுகளை எடுத்து, அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பௌலிங் போடுவது சிரமம்
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ்கீடாவிற்கு லாக்கி பெர்குசன் அளித்த பேட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அபூர்வமான பேட்ஸ்மேன் என்றும் அவருக்கு பௌலிங் போடுவது மிகவும் சிரமமான செயல் என்றும் தெரிவித்துள்ளார். அவரை முதலிலேயே அவுட் ஆக்கவில்லை என்றால் பிறகு வீழ்த்துவது மிகவும் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரோகித் குறித்து பெர்குசன் சிலிர்ப்பு
ரோகித் சர்மா உலக தரத்திலான ஆட்டக்காரர் என்றும் தான் ரோகித் சர்மாவின் மிகபெரிய ரசிகன் என்றும் பெர்குசன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சர்வதேச அளவில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கும் பந்து வீசுவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பௌலர்கள் சிறப்பு
கடந்த உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசியதாகவும் மற்றவர்களை காட்டிலும் தான் சிறப்பாக பௌலிங் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். உலக கோப்பை தொடருக்கு முன்னதாக சிறப்பாக இல்லாவிட்டாலும் அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.