நியூசிலாந்து டெஸ்ட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எப்படியாவது பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் இருந்தார் ரகானே. ஆனால் அவரால் அதனை சரியாக செய்ய முடியவில்லை. இதனையடுத்து அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறி 2வது டெஸ்ட் போட்டியில் வெளியேற்றப்பட்டார். மேலும் அவரின் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார். இந்த அறிகுறிகளால் ரகானேவின் டெஸ்ட் வாழ்க்கை முடிந்தது என வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர்.
பதவி பறிப்பு
இந்நிலையில் அதனை பிசிசிஐ மறைமுகமாக உறுதி செய்துள்ளது. ரகானே தனது கடைசி 20 இன்னிங்ஸில் வெறும் 407 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் வெறும் 2 அரைசதங்களே அடங்கும். இவ்வளவு மோசமான ஆட்டங்களில் அவரை அணியில் வைத்திருந்ததற்கு காரணம் துணைக்கேப்டன் என்ற பதவி தான். தற்போது அந்த பதவியை வேறு ஒருவருக்கு வழங்க பிசிசிஐ ஆலோசனைக்குழு முடிவெடுத்துள்ளது.
பிசிசிஐ கூட்டம்
இதுகுறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிப்பதா அல்லது கே.எல்.ராகுலை நியமிப்பதா என்ற விவாதம் நடந்துள்ளது. இறுதியில் அனுபவத்தையும், கேப்டன்சியையும் கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
கேப்டன் பொறுப்புகள்
ரோகித் சர்மா ஏற்கனவே இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் கோலியின் கேப்டன்சி பதவி ரோகித்திடம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டு வருகிறது. இப்படிபட்ட சூழலில் தான் தற்போது டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.