என்சிஏவில் ரோகித், இஷாந்த் பயிற்சி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா காயம் காரணமாக தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் தன்னுடைய பிட்னசை நிரூபித்தால் மட்டுமே தொடர்ந்து போட்டிகளில் இடம்பெற முடியும். இதேபோல இஷாந்த் சர்மாவும் பிட்னசை நிரூபிக்க அங்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ரவி சாஸ்திரி வலியுறுத்தல்
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்குள் இவர்கள் தங்களது பிட்னசை நிரூபித்து ஆஸ்திரேலியாவிற்கான பயணத்தை துவக்கினால் மட்டுமே தொடரில் இடம்பெற முடியும் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அப்பொழுதுதான் அவர்கள் ஆஸ்திரேலியாவின் 14 நாட்கள் குவாரன்டைனில் இடம்பெற்று பின்பு தொடரில் விளையாட முடியும்.
குவாரன்டைன் கட்டாயம்
ஐபிஎல்லில் பயோ பபளில் இருந்த இந்திய வீரர்கள் நேரடியாக சிட்னி சென்று அங்கு 14 நாட்கள் குவாரன்டைனில் உள்ளனர். அவர்கள் ஏற்கனவே பயோ பபளில் இருந்ததால் பயிற்சிகளில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரோகித் மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் இந்தியாவிலிருந்து செல்வதால் முதலில் குவாரன்டைனை முடித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆலோசனையில் என்சிஏ
வரும் டிசம்பர் 17ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்கவுள்ள நிலையில், அதற்குள் இவர்கள் இருவரும் பிட்னசில் தேறுவார்களா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்ட என்சிஏ நிர்வாகிகள் பிசிசிஐக்கு தங்களது முடிவை அறிவித்துள்ளனர். ஆயினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தடுமாற்றத்தில் இந்திய டெஸ்ட் அணி
இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு கேப்டன் விராட் கோலி நாடு திரும்பவுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இல்லாமல் டெஸ்ட் தொடர் நடந்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மை.