கொரோனா வைரஸ் முடக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முடங்கி உள்ளது. கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் நடக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள்
கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளம் மூலம் கிரிக்கெட் வீரர்கள் பேட்டி அளித்துக் கொண்டும், தங்கள் வீட்டில் செய்யும் வேலைகளை பகிர்ந்து கொண்டும் வருகின்றனர். ரோஹித் சர்மா சக கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடி வருகிறார்.
|
பேட்டி அளித்தார் ரோஹித்
கடந்த வாரம் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுடன் உரையாடினார் ரோஹித் சர்மா. இந்த நிலையில், சக இந்திய வீரர் பும்ராவுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் இந்தியில் உரையாடல் நடத்தினார். அதை ரசிகர்கள் கண்டு களித்தனர்.
|
இந்தியில் தான் பேசுவோம்
அப்போது சில ரசிகர்கள் அவரை ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது எரிச்சல் அடைந்தார் ரோஹித் சர்மா. நாம் இந்தியர்கள் நாங்கள் இந்தியில் தான் பேசுவோம் என கூறினார் அவர். அந்த கருத்து சர்ச்சையாக மாறி உள்ளது.
|
ரோஹித் சர்மா சொன்னது என்ன?
ரோஹித் சர்மா கூறுகையில், "அவர்கள் நம்மை ஆங்கிலத்தில் பேசுமாறு கூறுகிறார்கள். இல்லை நாம் இந்தியர்கள். நாங்கள் இந்தியில் தான் பேசுவோம். நான் தொலைக்காட்சி பேட்டிகளில் ஆங்கிலத்தில் பேசுவேன். ஆனால், இப்போது நான் வீட்டில் தான் இருக்கிறேன்" என்றார்.
பிற மொழிகளும் உண்டு
இந்த கருத்தை கேட்ட ரசிகர்கள் பலர், இந்தியில் பேசுவது உங்கள் உரிமை. ஆனால், இந்தியாவில் இந்தி தவிர பிற மொழிகளும் உண்டு. வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களும் உண்டு என அவரை வறுத்து எடுத்து வருகிறார்கள்.
தமிழ் மொழியின் பெருமை
குறிப்பாக தமிழர்கள் தமிழ் மொழியின் பெருமையை சொல்லி அவரை விமர்சித்து வருகிறார்கள். உலகில் மிக அதிக பரப்பளவில் பேசப்படும் இந்திய மொழி தமிழ் தான் என குறிப்பிட்டு ரோஹித் சர்மாவை விமர்சித்துள்ளார். சிலர் எங்களுக்கு இந்தி தெரியாது என அவருக்கு உணர்த்தி வருகிறார்கள்.