மும்பை: ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்படலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக செயல்படுபவர் விராட் கோலி. முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில், இவரது கேப்டன்ஷிப்பில் மூன்று வடிவிலும் இந்தியா சிறப்பாகவே விளையாடி வருகிறது.
குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளை குவித்து வருகிறது. எனினும், கடந்த 2 வருடங்களாக இவர் எந்த போட்டியிலும் சதம் அடிக்கவில்லை.
அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் அடிக்க ரொம்பவே சிரமப்படுகிறார். தனது பேட்டிங் டெக்னிக்கில் அவர் தடுமாறுவது தெளிவாக தெரிகிறது. அதேசமயம், இந்திய அணி வெற்றியும் பெறுகிறது. முடிந்த வரை தன்னால் முடிந்த அளவுக்கு பேட்டிங் + வெற்றி என இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார். எனினும், இந்திய ரசிகர்களும் சரி.. இந்திய அணி நிர்வாகமும் சரி.. "பேட்ஸ்மேன்" கோலியை தொலைத்துவிட்டு தேடி வருகிறார்கள். இதுதவிர, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி வெற்றிகளை குவித்தாலும், இவரது தலைமையில் முக்கிய ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை.
2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி, 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோல்வி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வி என்று இந்தியா கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை தோனி தலைமையில் வென்றது தான், இந்தியா கடைசியாக வென்ற முக்கியமான ஐசிசி தொடர் கோப்பையாகும் ஆகும்.
இந்த நிலையில் தான் குறுகிய ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட உள்ளதாக டைம்ஸ் ஆஃப் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், டெஸ்ட் போட்டிகளுக்கு கோலி கேப்டனாக தொடருவார் என்றும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கேப்டன் கோலி விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், வரும் அக்டோபர் மாதம் அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு ரோஹித் கேப்டனாக செயல்படுவாரா என்ற தெளிவான விவரம் இல்லை. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான அணி வீரர்கள் பட்டியலில் கோலி கேப்டனாகவும், ரோஹித் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, உலகக் கோப்பை பிறகே ரோஹித் கேப்டனாக பதவியேற்பார் என்று தெரிகிறது.
இங்கிலாந்துக்கு இந்தியா சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பே இந்தியா டிவிக்கு அளித்த ஒரு பேட்டியில் பேசிய இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பருமான கிரண் மோரே, இந்திய கிரிக்கெட்டின் வெவ்வேறு வடிவங்களுக்கு, வெவ்வேறு கேப்டன்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என்று கூறியிருந்தார். அதில், "இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு கேப்டன் என்ற அணுகுமுறையை நோக்கி நகர்வதாக நான் நினைக்கிறேன். இதனால், ரோஹித் ஷர்மாவுக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். விராட் கோலி, முன்னாள் தலைவர் தோனி தலைமையில் விளையாடிய ஒரு புத்திசாலி கேப்டன். கோலி, ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு இன்னும் எவ்வளவு காலம் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது குறித்து கோலியும் சிந்திப்பார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த முடிவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பீர்கள்.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் கேப்டன்களாக உள்ளனர். ஆஸ்திரேலியாவில், டிம் பெய்ன் மற்றும் ஆரோன் ஃபின்ச் கேப்டன்களாக செயல்படுகின்றனர். இதேபோன்ற அணுகுமுறை இந்தியாவில் ஒர்க் அவுட் ஆகும். இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சீனியர் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. விராட் கோலி, மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் சிறப்பாகவும் விளையாட வேண்டும். அது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், கேப்டனாகவும், தனி வீரராகவும் அவர் வெற்றிப் பெறுவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விராட் கோலி ஒரு நாள், 'இது போதும், ரோஹித் அணியை வழிநடத்தட்டும்' என்று சொல்லும் ஒரு காலம் வரும் என்று நான் நினைக்கிறேன்" என்று மோரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.