பொங்கிய லக்ஷ்மன்
இதைக் கண்ட முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் பொங்கி எழுந்துள்ளார். சிறந்த வீரராக இடம் பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ்-ஐ விட ரோஹித் சர்மா சிறந்தவர் என்பதை சுட்டிக் காட்டும் வகையில், ஆஷஸ் தொடரை விட உலகக்கோப்பை பெரிது என சுட்டிக் காட்டி உள்ளார்.
உயரிய விஸ்டன் கௌரவம்
கிரிக்கெட் உலகில் விஸ்டன் பத்திரிக்கைக்கு என்று தனி மரியாதை உண்டு. அந்த பத்திரிக்கையில் ஒரு வீரரின் பேட்டி அல்லது அவரை பாராட்டி செய்தி இடம் பெற்றால் அது கவனம் பெறும். அதே போல, வருடா வருடம் அவர்கள் வெளியிடும் சிறந்த வீரர்கள் பட்டியலுக்கும் தனி மரியாதை உள்ளது.
மூன்று ஆண்டுகள் இடம் பெற்ற கோலி
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விராட் கோலியை தேர்வு செய்தனர். அது மறுக்க முடியாத தேர்வாக இருந்தது. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டிற்கான தேர்வில் சர்ச்சை எழுந்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றார்
2019ஆம் ஆண்டின் உலகின் முன்னணி வீரராக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2005ஆம் ஆண்டிற்கு பின் ஒரு இங்கிலாந்து வீரர் விஸ்டன் முன்னணி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2005இல் ஆண்ட்ரூ பிளின்டாப் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
காரணம் என்ன?
அவர் 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆடிய ஆட்டம் மற்றும் ஆஷஸ் தொடரில் ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து அணியை மீட்டு வந்தது ஆகியவற்றை குறிப்பிட்டு அவரை முன்னணி வீரர் என பெருமைப்படுத்தி உள்ளது விஸ்டன்.
ஐந்து வீரர்கள் யார்?
இது தவிர 2019ஆம் ஆண்டின் ஐந்து சிறந்த வீரர்களாக பாட் கம்மின்ஸ், எலிஸ் பெர்ரி, ஜோப்ரா ஆர்ச்சர், சைமன் ஹார்மர், மார்னஸ் லாபுஷாக்னே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டின் முன்னணி டி20 வீரராக ஆண்ட்ரே ரஸ்ஸல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா 10 சதம்
இந்தப் பட்டியலில் எந்த இடத்திலும் ரோஹித் சர்மாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அவர் 2019ஆம் ஆண்டில் 7 ஒருநாள் போட்டி சதம், 3 டெஸ்ட் போட்டி சதம் அடித்து இருந்தார். டெஸ்டில் 5 போட்டிகளில் 3 சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் அடித்து இருந்தார். 2019இல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவரும் ரோஹித் தான்.
லக்ஷ்மன் விமர்சனம்
இந்த நிலையில் தான் விஸ்டன் சிறந்த வீரர்கள் பட்டியல் குறித்த தன் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் விவிஎஸ் லக்ஷ்மன். "கிரிக்கெட் விளையாட்டை பின்பற்றும் யாராக இருந்தாலும், அந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறாததை கண்டு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அடைவார்கள்" என்றார் லக்ஷ்மன்.
உலகக்கோப்பை பெரிது
"மேலும், ஆம் ஆஷஸ் முக்கியமான தொடர் தான். ஆனால், உலகக்கோப்பை, ஆஷஸ் தொடரை விட பெரியது. மேலும், ஒருவர் அதில் ஐந்து சதம் அடித்துள்ளார். அதில் முதல் சதம் கடினமான சவுதாம்டன் ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது. அங்கே வேறு எந்த வீரரும் ரன் குவிக்கவில்லை" என்றார் லக்ஷ்மன்.
அதிர்ச்சியாக உள்ளது
மேலும், "ரோஹித் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் முக்கியமான ஒரு சதத்தை அடித்தார். எனக்கு இது ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இந்த விஸ்டன் அறிவிப்பை கண்டு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அடைவார்கள்" என லக்ஷ்மன் கூறி உள்ளார்.