டி20 தொடர் துவக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்றைய தினம் துவங்கி நடைபெறவுள்ளது. இன்றிரவு 7 மணிக்கு இரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி துவங்கவுள்ளது.
டி20 தொடரை கைப்பற்ற இங்கிலாந்து தீவிரம்
இதற்கென கடந்த சில நாட்களாக இரு அணிகளும் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டன. முதலில் நடைபெற்றுள்ள டெஸ்ட் தொடரை இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இந்த டி20 தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி தீவிரம் காட்டுகிறது.
ரோகித்துக்கு 26 ரன்கள் தேவை
இந்த போட்டிகளில் துவக்க வீரராக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கி விளையாடவுள்ளதாக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி 26 ரன்களை அடிப்பதன்மூலம் ரோகித் 9000 ரன்கள் சாதனையை எட்டவுள்ளார்.
கோலி முதல் இந்திய வீரர்
டி20 தொடர்களில் 9000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை கேப்டன் விராட் கோலி படைத்துள்ள நிலையில், அவரை தொடர்ந்து இரண்டாவது வீரராக ரோகித் சர்மா இந்த சாதனையை எட்டவுள்ளார். அவருக்கு இந்த சாதனையை எட்ட வெறும் 26 ரன்களே தேவைப்படும் நிலையில், இன்றைய போட்டியிலேயே அவர் அதை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.