விருதுகள்
தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாட்டுத் துறையில் உலக அளவில் தலை சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, ஒவ்வொரு விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டு வருகிறது.
பரிந்துரைப் பட்டியல்
கிரிக்கெட் விளையாட்டின் சார்பாக வருடாவருடம் இந்த விருதுகளை பெற வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கு அனுப்பப்படும். விளையாட்டு அமைச்சகம் விருதுக்கு தகுதியான வீரர்களை தேர்வு செய்யும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியலை பிசிசிஐ அனுப்பி வைத்துள்ளது.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா
ரோஹித் சர்மா விளையாட்டுத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்தார். அந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்று இருந்தார்.
சிறந்த ஒருநாள் போட்டி வீரர்
2019ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் என ஐசிசி அவரை கௌரவப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் நான்கு சதம் அடித்த ஒரே வீரர் அவர் தான். அதனால், அவரது பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கோலிக்குப் பின்..
மிகச் சில கிரிக்கெட் வீரர்களே கேல் ரத்னா விருதை பெற்றுள்ளனர். கடைசியாக 2018இல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த விருதை பெற்று இருந்தார். அதன் பின் ரோஹித் சர்மா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கேப்டனாக..
ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி இந்திய அணியின் துணை கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கோலி இல்லாத சமயங்களில் அணியை வழிநடத்தி பல முக்கிய தொடர்களில் வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். இதை அடுத்தே அவரது பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறி உள்ளது.
இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா இந்திய அணியின் மூத்த வீரர் ஆவார். அவர் கடந்த சில ஆண்டுகளாக வேகப் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருந்ததற்கு இஷாந்த் சர்மா முக்கிய காரணம் என்ற அடிப்படையில் அவரது பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஷிகர் தவான்
இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளை செய்துள்ளார். இரண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். இந்திய அணிக்காக நீண்ட காலம் ஆடி வரும் அவர் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது பிசிசிஐ.
தீப்தி சர்மா
மகளிர் அணியை சேர்ந்த தீப்தி சர்மா மகளிர் ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக திகழ்கிறார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அதன் அடிப்படையில் அவரது பெயரும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.