தனி திறமை
ஹர்சல் பட்டேல், டி20 கிரிக்கெட் போட்டியின் கடைசி நேர கட்டத்தில் சாதுரியமாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்துவார். மேலும் முக்கிய கட்டத்தில் கேப்டன்களுக்கு விக்கெட்டை பெற்றுத் தருவார். கடந்த ஐபிஎல் தொடர் 2020 ஆம் ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்தி பர்பிள் நிற தொப்பியையும் ஹர்சல் பட்டேல் பெற்றிருந்தார்.
19 ரன்கள்
இதனால் ஹர்சல் பட்டேலை நம்பி எப்போது வேண்டுமானாலும் பந்தை கொடுக்கலாம் என்று கேப்டன்களும் நம்பினர். ஆனால் தற்போது அந்த நம்பிக்கையை அவர் சுக்கு நூறாக உடைத்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும் போது ஏழு ஓவர் முடிவில் 71 ரன்கள்தான் அடித்திருந்தது. இந்த நிலையில் ஹர்சல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 19 ரன்கள் குவிக்கப்பட்டது.
ரோகித் பேச்சு
இதனால் ஆஸ்திரேலியாவின் இலக்கு 90 என்ற அளவில் உயர்ந்தது.எனினும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் ஹர்சல் பட்டேலை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணி பந்து வீசும் போது கடைசி கட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
ரசிகர்கள் ஆச்சரியம்
இதனால் தான் ஹர்சல் பட்டேல் பந்துகளை ஃபுல் டாஸ் ஆக வீசி சிக்ஸர்களை வழங்கினார். ஹர்சல் பட்டேலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டிருந்தது.அதிலிருந்து மீண்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பழையபடி பந்து வீச முடியாது. ஹர்சல் குறித்து அதிகம் நான் பேசமாட்டேன் ஹர்சல் போட்டியில் வந்து மகிழ்ச்சியாக ஆட வேண்டும், அதுதான் நான் எதிர்பார்ப்பது என்று ரோகித் சர்மா கூறினார். ஹர்சல் படு மோசமாக பந்துவீசி வரும் நிலையில் யாராக இருந்தாலும் அவரை கடுமையாக விமர்சனம் செய்திருப்பார்கள். ஆனால் ரோகித் சர்மா அவருக்கு ஆதரவாக பேசி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.