கடினமான இலக்கு
இந்திய அணியை பொறுத்தவரையில் ஓப்பனிங் வீரர் ரோகித் சர்மா ( 33) சூர்யகுமார் யாதவ் (24) சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய தீபக் ஹூடா 21 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய போதும், பின்னர் வந்த ரிஷப் பண்ட் (44) சஞ்சு சாம்சன் (30) ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதனால் 20 ஓவர்களில் 191 ரன்களை இந்தியா குவித்தது.
பவுலர்கள் அசத்தல்
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். அதிகபட்சமாக கேப்டன் நிகோலஸ் பூரண் (24), ரோவ்மென் போவெல் (24) மட்டுமே அடிக்க, 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், ஆவேஷ் கான், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
ரோகித் விளக்கம்
இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இந்த களத்தில் ரன் குவிப்பது என்பது சாதாரணம் அல்ல. பேட்டிங் எப்படி செய்யப்போகிறோம் என பல குழப்பங்கள் இருந்தன. எனினும் அதிக ஸ்கோர் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 190 என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள பேட்டிங் திறமைக்கு எவ்வளவு பெரிய ஸ்கோரும் போதும் என நாம் நினைக்க முடியாது.
ரசிகர்களுக்கு நன்றி
எங்களின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் தெளிவாக செயல்பட்டனர். அவர்கள் போட்ட திட்டம் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடிந்தது. கடும் வெயிலில் எங்களுக்காக ஆதரவு கொடுக்க வந்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. 5வது போட்டியை எதிர்நோக்கியுள்ளேன் என கூறினார்.